Wednesday 28 December 2016

ஜல்லிக்கட்டு / ஏறுதழுவுதல் வரலாறு (History of Jallikattu)

பண்டைய தமிழ்நாட்டுக் காளைகள்


வேளாண்மையையே முக்கியத் தொழிலாகப் பெற்ற தமிழர் வாழ்வில் மாடுகள் இன்றியமையாதன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்கும் இயல்புள்ளவர் தமிழர். பலவகை மாடுகளை அவர்கள் அறிவார்கள்.

கருப்புக் காளை                    நின்று குத்திக் காளை
காட்டு மாடு                       பில்லைக் காளை
காராம் பசு                         புள்ளி மாடு
குள்ளிமாடு                        மயிலைக் காளை
கூடுகொம்புக் காளை               மரைக் காளை
கொம்புக் காளை                   விரிகொம்புக் காளை
சிவத்த காளை                     வெள்ளைக் காளை


இலக்கியங்களில் காளை

முக்கூடற் பள்ளு 109 வது பாடலில் மாட்டு வகை

.
குடைக்கொம்பன் செம்மறையன்
            குத்துக்குளம்பன் மேழை
      குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
            மடப்புல்லைக் கரும்போரான்
மயிலை கழற்சிக் கண்ணன்
            மட்டைக்கொம் பன்கருப்பன் மஞ்சள்வாலன்
      படைப்புப் பிடுங்கிகொட்டைப்
            பாக்கன் கருமறையன்
பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன்
            விடத்தலைப் பூநிறத்தான்
      வெள்ளைக் காளையும் இந்த
            விதத்திலுண் டாயிரந்தான் மெய்காணாண்டே.

குடைக்கொம்பன் முதல் வெள்ளைக் காளை வரை எல்லாம் மாட்டின் பெயர்கள். இவைகளும் இயற்கையோடு பொருத்தமான பெயர்களைப் பெற்றிருத்தல் காண்க.
(இ - ள்.) குடைக்கொம்பன்-குடைவளையாக வளைந்த கொம்புள்ள காளை. செம்மறையன்-உடலில் சிவந்த நிறத்துணுக்குகள் படரப்பெற்ற காளை. குத்துக்குளம்பன்-மிகவும் வளர்ந்த குளம்புகளையுடைய காளை. குற்றாலன்-குற்றாலத்திலிருந்து வாங்கிக் கொண்டு வந்த காளை. மடப்புல்லை-ஒரு வகை மழுகலான புல்லை நிறமுள்ள காளை. மயிலை-மயிலை நிறமுள்ளது. கருந்தோல் மேல் பசுமை வாய்ந்த வெள்ளை முடியுடையதாகக் காணப்படும் நிறத்தையே மயிலை என்பது வழக்கம். மேழை-முழுவத்தை இருபுறமும் தொங்கவிட்டு அடிக்கும் மேளக்காளை. மோழை என்பதன் திரிபு எனின் கொம்பில்லாதது என்று பொருள்படும்.
(வி - ம். ) “மேளக்குடைச் செவியன்” என்றும் பாடம் உண்டு. படைப்புப் பிடுங்கி-வைக்கோற் படப்பிலுள்ள வைக் கோலை வாயால் இழுத்துத் தின்னும் பழக்கமுடையது. “மடப்புல்லை” என்ற இடத்தில், “வடர்ப்புல்லை” என்றும், “விடத்தலை என்ற இடத்தில், “விடர்த்தலை” என்றும், பாடங்கள் உண்டு. கழற்சிக்கண்ணன்-கழற்சிக்காய் போன்ற கண்ணுடையது.
பரஞ்சோதிமுனிவர் அருளிச்செய்த திருவிளையாடற் புராணம், கூடல் காண்டம் விருத்தகுமார பாலரான படலத்தில்

செய்யவா யிடையிடையே முகமனுரை யின்னமுது
                         செவியி லூட்டத்
தையலாள் வளைக்கையறு சுவையமுது வாயூட்டத்
                         தளர்ந்த யாக்கை
ஐயர்தாந் திருவமுது செய்தமுதுண் டவரெனமூப்
                             பகன்று பூவிற்
கையதே மலர்வாளிக் காளைவடி வாயிருந்தார்
                              கன்னி காண.

   (இ - ள்.) தையலாள் - கௌரியம்மையின், செய்ய வாய் இடை இடையே முகமன் உரை இன் அமுது செவியில் ஊட்ட - சிவந்த வாயானது அடிக்கடி இன்மொழிகளாகிய இனிய அமுதினைச் செவியில் உண்பிக்கவும், வளைக்கை - வளையலணிந்த கையானது, அறுசுவை அமுது வாய் ஊட்ட - அறுசுவையோடுங் கூடிய அமுதினை வாயில் உண்பிக்கவும், தளர்ந்த  யாக்கை ஐயர் - (மூப்பினால்) தளர்ச்சியுற்ற திருமேனியையுடைய அவ்வேதியர், திருவமுது செய்து - உண்டருளி, அமுது உண்டவர் என -தேவாமுதம் உண்டவர் போல, மூப்பு அகன்று - முதுமை யொழிந்து, பூவில் கைய தே மலர் வாளிக்காளை வடிவாய் - மலர்வில்லை ஏந்திய கையினையுடைய தேன் சிந்து்ம மலர்க் கணைகளையுடைய மதவேளின் வடிவினை உடையராகி, கன்னி காண இருந்தார்- கௌரி பார்க்குமாறு இருந்தனர்.     இடையிடையே அமுதம் போலும் இன்மொழிகளைக் கூறிக் கையால் அமுதூட்டினாவ என்க. கையினையுடைய காளை, வாளியை யுடைய காளை எனக் கூட்டுக. மன்மதனுக்கு மலர் வில்லும் உண் டென்பதனை‘புஷ்பதந்வா’ என அவனுக்கு வழங்கும் பெயரானறிக;
"பூங், குலை சிலையாக் கொண்டவர் போலும்"
என மதுரைக்கலம்பகங் கூறுதலுங் காண்க. (25)

பூசியவெண் ணீறுபோய்க் கலவையாய்க் கண்டிகைபோய்ப்
                              பொன்செய் பூணுங்
காசணிபொற் குண்டலமுங் கடகமுமாய் மூப்புப்போய்க்
                                   காளை யான
தேசுருவங் கண்டுநடு நடுங்கிவளைக் கரநெரித்துத்
                              திகைத்து வேர்த்துக்
கூசியொரு புறததொதுங்கி நின்றாளக் கற்புமலர்க்
                              கொம்ப ரன்னாள்.

பூசிய வெள்நீறு போய்க் கலவையாய்-அணிந்த வெள்ளிய திரு நீறு மாறிக் கலவைச் சாந்தாகி, கண்டிகை போய் - உருத்தி ராக்கங்கள் மாறி, பொன் செய்பூணும் காசு அணி பொன் குண்டலமும் கடகமும் ஆய் - பொன்னாற் செய்த அணிகளும் மணிகளழுத்திய பொன்னாலாகிய குண்டலங்களும் கடகங்களும் ஆகி, மூப்புப் போய் காளை ஆன தேசு உருவம் - முதுமை மாறிக் கட்டிளமை ஆகிய ஒளி பொருந்திய உருவத்தை, அக்கற்பு மலர்க் கொம்பர் அன்னாள் கண்டு - கற்பினையுடைய பூங்கொம்பு போன்ற அக் கௌரியம்மை பார்த்து, நடுநடுங்கி வளைக்கரம் நெரித்து - நடுநடுங்கி வளையலணிந்த கைகளை நெரித்து, திகைத்து வேர்த்து - மனந்திகைத்து உடல் வெயர்த்து, கூசி ஒருபுறத்து ஒதுங்கி நின்றாள் - அஞ்சி ஒரு பக்கத்தில் ஒதுங்கி நின்றாள்.

தொல்லியலில் நோக்கில் காளைகள்


                          தொல்பழங்குடிகளின் ஓவியம்
  
                        சிந்துசமவெளியில் கிடைத்த ஜல்லிக்கட்டு படிமம்
                        National museum Delhi

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால்கொல்லேறு தழுவுதல்என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
                        பீகார் ராம்புரா அசோக தூணில் காளை


                       சென்னை அருக்காட்சியகத்திலுள்ள நடுகல்


பல்லவர் இலச்சினை


பாண்டியர்க்கு மீனும், சேரர்க்கு வில்லும், சோழர்க்குப் புலியும், சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினையாகத் திகழ்ந்தது போன்று, பல்லவர்க்கு நந்தி (காளை உருவம்) இலச்சினையாகத் திகழ்ந்தது.



பல்லவர்கள் (பொ.ஆ. 600-900)

சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் 3 நூற்றாண்டுகள் (பொ.ஆ.300-600) வரை என்ன நிகழ்ந்தது என்று அறியாவண்ணம் உள்ளது. அதனால் இக்காலக் கட்டத்தைப் பல வரலாற்றறிஞர்கள் “இருண்ட காலம்” என உரைக்கின்றனர். இருப்பினும் இக்காலக் கட்டத்தில் களப்பிரர் ஆட்சி நடத்தியதைப் பாண்டியர் மற்றும் பல்லவரது செப்பேடுகள் உணர்த்துகின்றன. இவர்களது காசுகள் என்று கருதத்தக்க காசுகளை திருஞானசம்பந்தமும் கிருஷ்ணமூர்த்தியும் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது ஆய்வாளர்களுக்கிடையே விவாதிக்கத்தக்கதாக உள்ளது. இதே காலத்தில் ஆந்திரப் பகுதியை ஆட்சி செய்த சாதாவாகனர்களது ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, இக்ஷவாகுகள், ப்ருஹத்பலாயன கோத்ரர்கள், ஆனந்தர், விஷ்ணுகுண்டர்கள் போன்றோர் சாதவாகன அரசின் மேற்குப் பகுதிகளையும், கிழக்குப் பகுதிகளில் பெல்லாரி, மைசூர் போன்ற பகுதிகளுடன் தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகள், செங்கல்பட்டு, வட, தென் ஆற்காடு மற்றும் திருச்சி வரை பல்லவர்கள் தமது ஆட்சியை விரிவுப்படுத்தி இருந்தனர். இவர்களது ஆட்சி பொ.ஆ. 4 ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் தொடங்கப்பட்டது. தமிழ் நாட்டில் இவர்களது ஆட்சி பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டு முதல் சிம்மவிஷ்ணு காலந்தொட்டு தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆட்சி நடத்திய முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மன், இரண்டாம் நரசிம்மன் (இராஜசிம்மன்) முதலாம் பரமேஸ்வரவர்மன், தந்திவர்மன் ஆகியோரது காசுகளே நமக்குக் கிடைக்கின்றன.
பல்லவர் காசுகள்:

சின்னங்கள்

பல்லவர் காசுகளில் அவர்களது குலச்சின்னமான திமிளுடன் கூடிய காளை உருவமே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. ஒரு சில காசுகளில் சிங்க உருவம் உள்ளது. பின்புறம் செடியின் தளிர், பாத்திரம், பாய்மரக்கப்பல், ஸ்ரீவத்ஸம், யானை, விதையுடன் கூடிய தளிர், வட்டத்திற்குள் சங்கு, கம்பிகளுள்ள சக்கரத்தின் நடுவில் சிறுவட்டம் கொடிக்கம்பம் உள்ளன.
     
 முக்கோண வடிவில் கொடி பறப்பது போல் போன்ற சின்னங்கள் இடம்பெறுகின்றன. பாய்மரக்கப்பல் பொறிக்கப் பெற்ற காசுகள் இவர்களது கடல் வாணிகத்தைச் சுட்டுகிறது. பல்லவர்களது முந்தைய காசுகளில் எழுத்துப்பொறிப்புகள் ஏதுமின்றி ஒரு சில சின்னங்களே இடம் பெற்றிருக்கும் காலம் செல்லச் செல்ல எழுத்துப்பொறிப்புக்களுடன் காசுகளை வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் காளையும் மறுபக்கம் ஸ்ரீவத்ஸமும் உள்ள எழுத்துப்பொறிப்பற்ற காசு காஞ்சிபுரம் அகழாய்வில் கிடைக்கப் பெற்றுள்ளது இங்குச் சுட்டத்தக்கதாகும். பல்லவர்கள் காளை உருவம் பொறித்தக் காசுகளை வெளியிடும் முன்பாகச் சிங்க உருவம் பொறித்த காசுகளை வெளியிட்டுள்ளனர். ஒருபுறம் சிங்கமும் மறுபுறம் ஸ்வஸ்திகா மற்றும் சங்கு போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்ட காசுகளை முதலாம் மகேந்திரவர்மனுக்கு முற்பட்டது, சிம்மவர்மனுக்குப் பிற்பட்டது என ஆர்.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிடுகின்றார். புள்ளியிட்ட வட்டத்திற்குள் இடது புறமோ அல்லது வலது புறமோ நோக்கிய சிங்கம், அதன் முன் வில், அதன் பின் மீன், அதன் கீழ் புலி உருவம் ஒரு பக்கமும் மறுபக்கம் கம்பிகளாலான சக்கரத்தின் நடுவில் சிறுவட்டம் உள்ள காசுகளை சிம்மவர்மன் மூவேந்தர்களையும் வென்றதன் நினைவாக வெளியிட்டிருக்கலாம் என்றும் இதன் காலம் பொ.ஆ. 570-580 எனவும் கிருஷ்ணமூர்த்தி கருதுகின்றார்.

மகேந்திரவர்மனுக்கு முன்னர் வெளியிடப் பெற்ற காசுகள் அனைத்தும் புள்ளியிட்ட எல்லைக்குள் (dotted boundary) வடிக்கப் பெற்றுள்ளன. ஸ்ரீவஸ்தா, பிறை, சங்கு, பாம்புடன் காளை உருவமுள்ள காசுகள் இரண்டாம் சிம்மவர்மன் காலத்தில் தொடங்கப் பெற்று பின்னர் வந்த மன்னர்களாலும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன.

இச்சின்னங்கள் இரண்டாம் சிம்மவர்மனின் விளவெட்டி செப்பேட்டிலும் காணப்படுகிறது. 1970இல் காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவில் அருகே 11 காசு செய்யும் அச்சுகள் கிடைத்துள்ளன. இவை இரண்டாம் சிம்மவர்மனின் காசுகளில் உள்ள உருவங்கள் உள்ளதால் அவரது காசுகளைப் போலப் போலிக் காசுகளை உருவாக்கப் பயன்படுத்தப் பெற்றதாகக் கிருஷ்ணமூர்த்தி கூறுகின்றார்.

எழுத்துப்பொறிப்பு காசுகள்

முதலாம் மகேந்திரவர்மன் காலந்தொட்டே எழுத்துப்பொறிப்பு காசுகள் கிடைக்கின்றன. அதைத் தொடர்ந்து முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேஸ்வரன், இரண்டாம் நரசிம்மன், தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன் போன்ற அரசர்களும் தங்களது விருதுப் பெயர்களை பல்லவ கிரந்த எழுத்துக்களில் பொறித்து காசுகளை வெளியிட்டுள்ளனர். எழுத்துப்பொறிப்பு காசுகளின் பின்புறம் அலங்கரிக்கப் பெற்ற வட்டத்திற்குள் சக்கரம், ஸ்வஸ்திகா, சங்கு, இருபுறமும் விளக்கு, பூசாடி, அலங்கரிக்கப் பெற்ற வட்டத்திற்குள் பூசாடி, குடை, இரு குடை, புலி, மீன் போன்ற சின்னங்களும் இடம்பெறுகின்றன. பல்லவர் காசுகளில் இருப்பதைப் போன்று காளை உருவம் விஷ்ணுகுண்டர்களது காசுகளிலும் சற்றே வேறுபட்டு இடம்பெறுகின்றது.

கிடைத்துள்ள இடங்கள்

பல்லவர்களது காசுகள் அவர்களது ஆட்சித் தலைமையிடமான காஞ்சிபுரத்தில் கிடைக்கின்றன. இது தவிர ஆரணி, ஆற்காடு, கடலூர், கரூர், கும்பகோணம், செஞ்சி, தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, தரங்கம்பாடி, திருவையாறு, திருவண்ணாமலை, பாபநாசம், மதுரை, மாமல்லபுரம், விழுப்புரம், வேலூர் போன்ற பல இடங்களிலும் பல்லவர் காசுகள் கிடைத்திருப்பினும் கரூர், திருக்கோயிலூர் ஆகிய ஊர்களியேயே அதிக அளவில் கிடைக்கின்றன. இதுவரை பல்லவர் காசுகள் குவியலாகக் கிடைக்கவில்லை. இவை பல ஊர்களிலும் பரவலாக்க் கிடைப்பதால் நாணயசேகரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லப் பெற்றிருக்கலாம்.

மதுரை நாயக்கர் (பொ.ஆ. 1600 – பொ.ஆ. 1700)

மதுரைப் பகுதியை ஆட்சி புரிந்த நாயக்கர்கள் மதுரை நாயக்கர்கள் எனப்பட்டனர். 1529இல் விசுவநாத நாயக்கர் மதுரை நாயக்கராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர், திருமலை நாயக்கர், இராணிமங்கம்மாள், இராணி மீனாட்சி போன்ற பல திறமையான அரசர்கள் மதுரையில் அரசாண்டு நாணயங்களையும் வெளியிட்டுள்ளனர்.

சின்னங்கள்:

மதுரை நாயக்கர்கள் எண்ணற்ற உருவங்களைச் காசுகளில் பொறித்துள்ளனர். இவர்களுக்கென்று தனி குலச்சின்னம் இல்லை. பெரும்பாலும் பாண்டியர்கள் பயன்படுத்திய இரு கயல்கள், செங்கோல் சின்னங்களையும் விஜயநகர அரசுகளைப் பின்பற்றி கடவுளர் மற்றும் விலங்குகளின் உருவங்களையும் காசின் ஒருபக்கம் பொறித்துள்ளனர். மறுபக்கம் வெளியிட்ட அரசர்களின் பெயர்களைப் பொறித்துள்ளனர். மயில் மீது முருகன், விசயரகுநாதன்
மீன் நிற்கும் உருவம், வலது பக்கம் நோக்கி நிற்கும் காளை, இடது பக்கம் நோக்கி நின்ற நிலையில் காளை போன்ற பல சின்னங்கள் ஒருபுறமும் மறுபுறம் காசுகளை வெளியிட்ட அரசர்களின் பெயர்களும் இடம்பெறுகின்றன

சம்புவராயர்கள் (14 ஆம் நூற்றாண்டு)

சோழப் பேரரசை உருவாக்குவதில் பெரும்பங்காற்றிய பல சிற்றரசுக் குடும்பங்களுள் சம்புவராயர் குடும்பமும் ஒன்றாகும். அதிராஜேந்திரன் (பொ.ஆ. 1070), மூன்றாம் இராஜராஜன் (பொ.ஆ. 1216-1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத்தளபதிகளாகவும் நாடு காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய சம்புவராயர்கள் சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் தனியாட்சி நிறுவினர். அவ்விதம் முதல் தனியாட்சியை நிறுவியர் இராசகம்பீர சம்புவராயராவார் (பொ.ஆ. 1216-1268). இவர் வடாற்காடு மாவட்டம் போளூர் வட்டத்திலுள்ள படைவீடு என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். இவர்களின் ஆட்சிப் பகுதி இன்றைய கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய படைவீட்டு இராச்சியமாகும். இவர்களது இராச்சியம் முதலில் விசயகண்ட கோபாலன் என்ற பாண்டிய மன்னனாலும் பிறகு படையெடுத்த குமாரகம்பண்ணனாலும் வீழ்ச்சியுற்றது.


சம்புவராயர் காசுகள்:
2010 பிப்ரவரியில் ஆறுமுகசீதாராமன் “னாராயண” என்ற எழுத்துப் பொறித்த சம்புவராயரின் செம்புக் காசு ஒன்றைத் திருக்கோயிலூரிலிருந்து கண்டுபிடித்துள்ளார். மேலும், இவர் சம்புவராயரின் குலச்சின்னமான காளை ஒரு புறம் பொறிக்கப் பெற்றிருப்பதைக் கொண்டும் மூன்றாம் இராசநாராயண சம்புவராயரின் கல்வெட்டு எழுத்தமைதியுடன் ஒத்து வருவதாகவும் கூறி இக்காசை வெளியிட்ட மன்னர் மூன்றாம் இராசநாராயண சம்புவராயரே என்று உறுதிப்படுத்தியுள்ளார்.


சோழர் கால நாணயங்கள்
சங்க காலச் சேரர் தலைநகரான கரூரில், அமராவதி ஆற்றுப்படுகையில், சங்ககாலச் சோழர் காசு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. காசின் முன்பக்கத்தில் காளை உருவம் நின்ற நிலையில் காணப்படுகிறது. காளையின் கீழே நந்திப் பாதச் சின்னங்கள் காணப்படுகின்றன. பின்பக்கத்தில் புலி உருவம் கோடுகளினால் வரையப்பட்டுள்ளது. காசின் வடிவம் நீள்சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. காசில் உள்ள காளை, அச்சுக் குத்திய வெள்ளி முத்திரை நாணயங்களில் உள்ள காளையைப் போலவே உள்ளது. எனவே இந்தச் செப்புக்காசு வார்ப்பு முறையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் காசில் வார்ப்பு முறையும், முத்திரை முறையும் கலந்து உள்ளது. இந்தக் காசின் காலம் கி.மு. 3-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என ஆறுமுக சீதாராமன் போன்ற தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, கி.மு. 3-ஆம் நூற்றாண்டளவில் வார்ப்பு முறையில் காசைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் தமிழர்கள் அறிந்திருக்கின்றனர். இது அவர்களின் மேம்பட்ட வாழ்விற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. 


காளை ஆட்டம்



காளை மாட்டின் பொம்மைக் கூட்டிற்குள் நுழைந்துகொண்டு நையாண்டிமேளம் இசைக்கேற்ப ஆடப்படுவது காளை ஆட்டம் ஆகும். சல்லிக்கட்டில் இடம்பெறும் காளையை அடக்குதல் என்ற நிகழ்வு காளை ஆட்டத்தில் போலச் செய்தலாக நிகழ்த்திக் காட்டப்படும்.     கரகாட்டத்தின்     துணைநிலை     ஆட்டமாக ஆடப்பட்டுவருகிறது.

சோழர் காலக் கட்டடக்கலைக்குச் சிறப்பான சான்றாக விளங்கும் தாராசுரம், சிற்பங்களின் எழில்மிகு தோற்றங்களைப் பல வகைகளில் வெளிப்படுத்துகிறது.தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் உலகப் புகழ்பெற்றதாகும். இது யுனோஸ்கோவால் ஐக்கிய நாட்டுகல்வி சமூகப் பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபியல் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


சிற்பக் கலையின் மிக உன்னதமான படைப்புகள் கோவிலின் வெளிச்சுவர்களை அலங்கரிக்கின்றன. தமிழ் நூலான, 63 சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் பெரிய புராணத்தில் இடம் பெற்ற காட்சிகளும், நடனக்கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் கூட்டுச் சிற்பங்கள், கூத்தாடிகளின் வித்தைகள், காளை-யானை கூட்டுச் சிற்பம் ஆகியவை வெகு சிறப்பாக சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன

இலக்கியங்களில் ஏறு தழுவல்


ஆயர்கள் புலி முதலிய கொடிய விலங்குகளிடமிருந்து தம் பசு முதலிய இனங்களைக் காக்க வேண்டிய நிலையில் இருந்தனர். மேலும் நாட்டின் எல்லைப் பகுதி காடு. பகைவரின் தாக்குதலுக்கு முதலில் உட்படுவதும் அப்பகுதியே, ஆதலால் அவர்கள் வீரம் உடையவராக விளங்க வேண்டியிருந்தது. எனவே ஆயர், தம் மகளை மணக்க வரும் ஆடவர் வீரம் மிக்கவராய் விளங்க வேண்டும் என எண்ணினர். அதன் காரணமாக ஏறு தழுவும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினர். ஏறு தழுவுதல் என்பது சீறிப் பாயும் காளைகளைத் தழுவி அடக்குதல் ஆகும். ஆயர் ஏறுகளின் கொம்பைக் கூர்மையாகச் சீவிப் பரந்த வெளியான ஏறு தழுவும் இடத்தில் விடுவர். இளைஞர் போட்டி போட்டு ஏறு தழுவ முயல்வர். ஏறு தழுவிய ஆயனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்துத் தருவர் ஆயர். ஏறு தழுவல் காட்சிகளை நல்லுருத்திரன் பாடிய முல்லைக் கலிப் பாடல்களில் விரிவாகக் காணலாம்.
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர் 
 கலித்தொகை-102 : 9-10)
(பொருபுகல் = போர் செய்வதில் விருப்பம் உடைய; ஏறு = காளை)
போர் செய்யும் விருப்பம் உடைய நல்ல காளையை அடக்குபவரே அல்லாமல் வேறு யாரும் இவளது மெய் தீண்டத்தக்கவர் அல்லர் என்பது இதன் பொருள். ஆயர்குலப் பெண் ஏறு தழுவும் ஆடவனையே விரும்பி மணப்பாள் என்பதை இது உணர்த்துகிறது.

ஆடு, மாடுகள் வதியும் இடத்தையும், ஏறு தழுவும் இடத்தையும் ‘தொழு’ என்பர். ஏறு தழுவுவதற்கு முன் நீர்த்துறைகளிலும், மரத்தடிகளிலும் உள்ள தெய்வங்களை வழிபடுவது மரபு. வீரம் அற்றவனை ஆயர்குலப் பெண்டிர் விரும்ப மாட்டார். காளையின் கொம்புக்கு அச்சம் கொள்பவனை ஆயர்மகள்அடுத்த பிறவியில் கூடக் கணவனாக ஏற்கமாட்டாள். இக்கருத்தை

கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

(கலித்தொகை- 103 : 63-64)
(கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)
என்ற கலித்தொகை அடிகள் எடுத்துரைக்கின்றன.


இளைஞர்கள் ஏறு தழுவும் காட்சியைக் காணும் தோழியும் தலைவியும் பேசிக் கொள்ளும் உரையாடலில் அக்காட்சி அழகாக விரிகிறது. ஆயர் காளைகளைத் தொழுவில் விடுகின்ற போது வாத்தியங்கள் முழங்குகின்றன. மகளிர் வரிசையாக நிற்கின்றனர். தொழுவில் ஆயர் பாய்ந்தபோது தூசி கிளம்புகிறது; தொழுவில் பாய்ந்த ஆயர் காளைகளின் கொம்பினைப் பிடித்தனர்; தம் மார்பில் பொருந்தும்படி தழுவினர். அவற்றின் கழுத்தில் அடங்கினர்; கொண்டை (இமில்) முறியும்படி தழுவினர்; தோளுக்கு நடுவே காளையின் கழுத்தைப் புகும்படி விட்டனர்; காளைகள் ஆயர்களைக் கீழே வீழ்த்தின; நீண்ட கொம்புகளால் சாகும்படி குத்தின; மொத்தத்தில் கோபமுற்ற காளை எமனைப் போல் விளங்கியது.

இக்காட்சிகளைக் கலித்தொகை 105 ஆம் பாடல் விரிவாகக் காட்டுகிறது.
ஏறு தழுவல் முடிந்தபின் உறவினர் இசைவுடன் திருமணம் நிகழ்த்துவதே ஆயர் குல வழக்கமாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில், கலித்தொகையில் மட்டுமே ஏறு தழுவல் நிகழ்ச்சி இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது.

கலித்தொகையில் பண்பாடு

கலித்தொகையில் இடம்பெறும் 'ஏறு தழுவுதல்' பற்றிய செய்தி
தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். காடும் காடு சார்ந்த
நிலமுமாகிய முல்லை நிலப்பகுதியில் இந்த வீரவிளையாட்டு
நிகழ்ந்தது. கொம்பு சீவப்பட்ட எருதுகளை அடக்கிய வீரர்களை
விரும்பிப் பெண்கள் மணம் முடிந்தனர். தொழுவில் ஏறுகள்
கட்டவிழ்த்து விடப்படும். இளைஞர்கள் நீர்த்துறையிலும்
ஆலமரத்திலும்     மாமரத்திலும் உறையும் தெய்வங்களை வணங்கியபின் தொழுவில் பாய்ந்து காளைகளோடு போராடுவர். மகளிர் பரண்மீது நின்று ஏறுதழுவும் காட்சியைக் காண்பர். வீரர் சிலரின் மார்பில் காளைகள் கொம்புகளால் குத்தும். குடர் வெளியே தள்ளப்படும். ஏறுகளை அடக்கும் வீரர்கள் மக்களால் போற்றப்படுவர். ஏறு தழுவல் முடிந்தபின் ஊர்மன்றத்தில் மகளிரும் மைந்தரும் கைகோத்துக் குரவையாடுவர். ஏறு தழுவுதற்குத் தயங்கும் ஆயர் இளைஞனை ஆயர் மகள் கணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆயர் பெண் எருமையின் கொம்பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணத்தை நடத்துவர்.



அகப்புறப் பெருந்திணை
பெருந்திணை என்பது அகத்திணை இலக்கணத்திற்கு இசைந்ததாக - ஒத்து வருவதாக - ஏற்கத் தக்கதாக அமையும்போது அதனை அகப்பொருட் பெருந்திணை என்று குறிப்பிட்டனர். அதற்கு மாறாக, அகத்திணைக்கு அடங்காமல் - முரண்பட்டதாக அமையும் பெருந்திணைச் செய்திகளை அகப்புறப் பெருந்திணை என்று வகைப்படுத்தினர்.
5.6.1 அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகள்
நாற்கவிராச நம்பி அகப்புறப் பெருந்திணையின் பிரிவுகளாக எண்வகைப்பட்ட செய்திகளை விளக்கிச் சென்றுள்ளார். அவற்றில்
1) மடலேறுதல்
தன் குறை நீங்காத தலைவன் பனை மடலால் குதிரையைச் செய்து அதன் மீது ஏறி நின்று தன் விருப்பத்தை வெளிப்படுத்துதல்.
2) விடை தழாஅல்
தலைவன் தான் விரும்பிய தலைவியை மணத்தல் பொருட்டு, ஆற்றல் மிகுந்த ஓர் எருதினைத் தழுவி அடக்குதல். இதனை ஏறு தழுவுதல் என்று கூறுவர். (விடை-எருது, ஏறு, காளை; தழாஅல்-தழுவுதல்)

தமிழகத்தில் தற்போது காணப்படும் மாடுகளின் வகைகள்

    காங்கேயம் காளை : காங்கேயம் பகுதிகளிலும்
    உம்பளச்சேரி மாடு : தஞ்சை டெல்டா பகுதிகளிலும்
    பர்கூர் மலை மாடு : அந்தியூர் பகுதியிலும்
    புளியகுளம் பட்டி மாடு : பழைய மதுரை பகுதியிலும்
    தேனி மலை மாடு : தேனி பகுதிகளிலும்
     ஆலம்பாடி மாடு    தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய பகுதிகளிலும்       
   காணப்படுகின்றன

ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு)



ஏறுதழுவல் அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் திமிலை தழுவிச்செல்வதாகும்

இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

நடுவண் அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.[14]

பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.


உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்கள்சில:

    காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
    காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட    
    வேண்டும்.
  காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.
    ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.
  காளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
    காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.

மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, மத்திய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என மத்திய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.

ஜல்லிக்கட்டு விழா

ஜல்லிக்கட்டு விழா 2 வகையாக பிரிக்கப்படுகிறது. பெரிய வகை விழாவின் அமைப்பாளர் ரூ.5 லட்சமும், சிறிய வகை விழா அமைப்பாளர்கள் ரூ.2 லட்சமும் பிணை வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஜல்லிகட்டு அமைப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சென்னை மத்திய பிராணிகள் நலவாரிய அமைப்புக்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய சான்றுகள் வருமாறு:-

முன்னெச்சரிக்கை

செயல்படும் கால்நடை விதிகள் 2001-ன்படி பதிவு செய்யப்பட்டதற்கான சான்று. பங்குபெறும் மாட்டின் முன்புறம், பின்புறம், வலப்புறம் மற்றும் இடப்புறம் என 4 பக்கங்களிலும் எடுத்த புகைப்படத்தின் 8*12 அளவிலான நான்கு பிரதிகள் தலா நான்கு எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடம், நாள், நேரம் மற்றும் இதர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உள்பட அனைத்து விபரங்களையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் நேரிடையாக சமர்ப்பிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில் இருந்து காளைகள் வெளியேறும்போது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படா வண்ணம் 2 அடுக்கு முறையில் உறுதியான மரத்தால் ஆன தடுப்பு காலரிகள் அமைக்கப்பட வேண்டும். இதன் உறுதி தன்மையை பொதுப்பணித்துறை(கட்டுமானம்) செயற்பொறியாளர்கள் நேரிடையாக தணிக்கை செய்து உறுதிதன்மை சான்று அளிக்கும் பட்சத்தில் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும்.

மருத்துவ சான்று

போட்டியில் பங்கு பெற உள்ள காளைகள், வீரர்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களை முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும். அனைத்து காளைகளும் கால்நடை துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். கால்நடைத்துறையினர், புகையிலை, மது, ஊக்க மருந்துகள் போதை வஸ்துகள் ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்து, காளைகள் தகுதியுடையது என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தகுதியற்ற காளைகள் என கண்டறியும் பட்சத்தில் அந்த காளைகள் எக்காரணத்தை கொண்டும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட மாட்டாது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவரிடம் தகுதி சான்று பெற்ற பின்னரே கலந்து கொள்ளவேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் மஞ்சள் நிறத்தில் கால்சட்டை, பனியன் ஆடைகள் அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்று நிறம் கொண்ட உடை அணிந்து கலந்து கொள்ள கூடாது. விழாவுக்கு குறைந்தபட்ச தொகையான ரூ.2 லட்சமும், அல்லது ரூ.5 லட்சமும் கலெக்டரின் பெயரில் முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.

இந்த தொகை ஜல்லிக்கட்டின் போது காயமுறும் நபர்களுக்கும், இறக்கநேரிடும் நபர்களது வாரிசுதாரர்களுக்கும் வழங்கிடும் வகையில் பயன்படுத்தப்படும். மேற்படி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத பட்சத்தில் மட்டுமே மேற்படி தொகையானது விழா அமைப்பினருக்கு திருப்பி வழங்கப்படும்.

விதிமுறைகள் கடைப்பிடிக்க...

நிகழ்ச்சியில் பங்கேற்று காயமுறும் மற்றும் இறக்க நேரிடும் நபர்களுடைய வாரிசுதாரர்களுக்கு எக்காரணம் கொண்டும் அரசினால் நிவாரண தொகை வழங்க இயலாது. மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை ஆரம்பம் முதல் முடியும் வரை அனைத்து நிகழ்வுகளையும் விடுபடாமல் வீடியோவில் படம் பிடித்தும், அதனை 3 குறுந்தகடுகளில் பதிவு செய்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வேண்டும்.

நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 27/2009 பிரிவு 7-ன்படி விழா அமைப்பினர் கடைப்பிடிக்கவில்லை என தெரியவரும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிகோரிய மனுவானது மாவட்ட கலெக்டரால் நிராகரிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கப்படமாட்டாது.

நடவடிக்கை

விழா அமைப்பினர் மாவட்ட கலெக்டரால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளில் அரசுக்கு 15 தினங்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கலெக்டரிடம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறாமலோ அல்லது அனுமதிக்கப்படும் இடங்களில் நிகழ்ச்சி நாளன்று விழா அமைப்பினர் மேற்காணும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிகழ்ச்சி நடத்திட முற்படுகையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள்/ பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 27/2009 பிரிவு 7-ன் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டும், அவர்களுக்கு ஒரு வருட சிறைதண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்.

ஜல்லிகட்டு நிகழ்ச்சியினை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மாலை 5 மணிக்கு மேல் நிகழ்ச்சியினை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.

மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு விழா நடத்த எழுத்து மூலமாக உறுதியளிக்கும் விழா அமைப்பினர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட உரிய அனுமதி வழங்கப்படும். 

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, 'வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை நாம் நம் பகுதிகளில் 'சர்க்கஸ்' மூலம் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் வனவிலங்குகளின் ஆர்வலர்களின் செயல்பாடுகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்க்கஸ்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் இடம்பெறுவதில்லை.

2008 ம் ஆண்டு முதலாக, தமிழகத்தில் உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு விலங்குகள் நல அமைப்பினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்ததோடு, பல்வேறு வழக்குகளை உயர்நீதி மன்றத்தில் தொடுத்தனர். இதை எதிர் கொள்ள ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009 ஐ கொண்டுவந்தது தமிழக அரசு. ஒவ்வொரு முறையும் ஒரு சில கட்டுப்பாடுகளோடு ஜல்லிக்கட்டு நடைபெற்றன .  டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு C.W.P No. 890/91 21,ஆகஸ்ட்,1997 மத்திய அரசுக்கு போட்ட உத்தரவில் MINISTRY OF SOCIAL JUSTICE AND EMPOWERMENTG.S.R. 619(E), New Delhi, the 14th October, 1998 தன் அறிவிக்கையில் 1.கரடி 2. குரங்கு 3. புலி 4.சிறுத்தை மற்றும்  5 சிங்கம் மட்டுமே காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. 1, ஜூலை, 2011, அன்று சுற்றுச் சூழல் மற்றும் வன அமைச்சகம் காளையை ஆறாவதாக சேர்த்துள்ளது.

2011ம் ஆண்டு ஜூலை மாதம், அன்றைய காங்கிரஸ் அரசில் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே இருந்த பட்டியலில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. மேலும் பிராணிகள் வதை சட்டம் பிரிவு 22 ன் கீழ் ஆணையும் இடப்பட்டது.

இதை தொடர்ந்து விலங்குகளுக்கான நெறிமுறைகள் கொண்ட மக்கள் அமைப்பு (PETA) ஜல்லிக்கட்டை தடை செய்ய கோரியும்,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” ஐ அகற்ற கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, உடனடி தடையையும் கேட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் காளைகளை துன்புறுத்தாது, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் இந்த நிகழ்சியில் பங்கேற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்ற தமிழக அரசு மற்றும் வாதங்களையும், உத்தரவாதங்களையும் ஏற்று கொண்டு சில கட்டுபாடுகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தது. 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பிராணிகள் நல வாரியம் மற்றும் சில அமைப்புகள், ஜல்லிக்கட்டு நடந்த அத்துனை இடங்களிலும் நடைபெற்ற நிகழ்சிகளை நிழற்படம் மற்றும் கானொளியில் பதிவு செய்து, காளைகளுக்கு இழைக்கப்பட்ட பல கொடுமையான காட்சிகள் குறித்த நீண்ட பதிவினை செய்தது. மேலும் தமிழக அரசு மற்றும் ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவ்வாறெல்லாம் மீறப்பட்டன என்பதை ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்தனர். இதையடுத்து உச்சநீதிமன்றம் மே மாதம் 7 ம் தேதி, 2014ம் ஆண்டு 'ஜல்லிக்கட்டை' தடை செய்தது. மேலும் தமிழக அரசின் ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டத்தை நீக்கியது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயராம் ரமேஷ் அவர்கள் 'காட்டுமிராண்டி தனமான' இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது குறித்து மகிழ்ச்சி என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதிலும் அரசியல் செய்ய நினைத்த காங்கிரஸ் அரசு இந்த வழக்கின் கடைசி தருணத்தில் 'காளைகளை' பட்டியலிலிருந்து நீக்குவதாக சொன்ன போது, நீதிமன்றம் கடுமையாக அரசை கண்டித்ததோடு, இனி இது குறித்து விலங்குகள் நல வாரியத்தை கலந்தாலோசித்தே இது போன்ற மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது.

இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி பிரிவு 21,22 ன் படி, பிரிவு 3ன் கீழ் 11 (1) (a) மற்றும் (o) மற்றும் இந்திய அரசியலைமைப்பு சட்டம் 51 A (g) மற்றும் (h) படி காளைகளை ஜல்லிக்கட்டில் அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் தமிழக அரசின் ,”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” சட்டமானது இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 க்கு எதிர்மறையாக அல்லது முரணாக உள்ளது என்று கூறி அதற்கு பல்வேறு உதாரணங்களை மேற்கோள் காட்டியது. மேலும் தமிழக அரசின் இந்த சட்டம் விலங்குகளின் நலன் குறித்து உருவாக்கப்படவில்லை என்றும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டது.

மேலும் பிராணிகள் நலன் குறித்த ஒவ்வொரு விவகாரத்தையும் பிராணிகள் நல வாரியம் முன்னின்று, அரசுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும், இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டத்தை சீரிய வகையில் விரைவாக செயல்படுத்த அந்த வாரியம் முயற்சிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் இந்தியா முழுவதும் இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

இப்போதைய நிலை?

பிராணிகளுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதாக உறுதி கூறிய ஏற்பாட்டாளர்கள் அதை மீறியதாலும், கட்டுப்பாடுகளை செயல்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்த தமிழக அரசு செய்ய தவறியதாலும், அந்த விதி மீறல்களை ஆதார பூர்வமாக நிரூபித்த காரணத்தினாலும் தான் இந்த பிரச்சினை எழுந்தது என்பதை நாம் உணர வேண்டும். இந்த சூழ்நிலையில், தமிழகத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் (பாஜக உட்பட) ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தாலும், சட்ட ரீதியான அமைப்பான பிராணிகள் நல வாரியம், காளையை பட்டியிலில் இருந்து நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறது. தொடர்ந்து மத்திய அரசு அந்த அமைப்பினருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறது. மேலும் அந்த வாரியத்தின் ஒப்புதல் இல்லாமல் நீதிமன்றம் அரசின் கோரிக்கையை ஏற்காது என்பதை தெளிவாக்கியிருக்கிறது.

சட்ட திருத்தம் கொண்டு வரலாம் என்றாலும், சட்ட ரீதியான விலங்குகள் நல அமைப்பினரின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்றே கொண்டு வர முடியும் என்பதையும், ஒரு வேளை அதை செய்தாலும் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான காங்கிரஸ் கட்சியினர் மாநிலங்களைவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நாம் செய்ய வேண்டியது ஜல்லிக்கட்டு அனுமதியைவிட காட்சிப் விலங்கிலிருந்து காளையை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்ட திருத்தம் கொண்டு வருவதே  சாலச் சிறந்தது.


ஜனாதிபதிக்கு 'பீட்டா' கடிதம்:
'ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, அவசரச் சட்டம் இயற்ற, ஜனாதிபதி ஒப்புதல் தரக் கூடாது' என, விலங்குகள் பாதுகாப்பு இயக்கமான, 'பீட்டா' வலியுறுத்தி உள்ளது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, 'பீட்டா' அனுப்பியுள்ள கடித விவரம்:ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வகையில், அவசர சட்டம் இயற்றும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளதாக அறிகிறோம். காளைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு, ஒப்புதல் அளிக்கக் கூடாது. இவ்வாறு, 'பீட்டா' எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய நடுவண் அரசு அனுமதி வழங்கியது இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது.பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.

C.P.சரவணன், வழக்கறிஞர் 

References:
1.   மலையருவி,(நாடோடிப் பாடல்கள்),Mr.பர்ஸி மாக்வீன்,I,C,S.,
2.   சம்புவராயர் காசுகள்,முனைவர் மா.பவானி,உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
3.   தாராசுரம்,முனைவர் வீ.செல்வகுமார்,உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறை
4.   பல்லவர் காசுகள், முனைவர் மா.பவானி,உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை
5.   .மதுரை நாயக்கர் காசுகள்,முனைவர் மா.பவானி,உதவிப்பேராசிரியர்
6.   கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை



No comments:

Post a Comment