Saturday 31 December 2016

V.K. சசிகலா அரசியல் வாழ்க்கை V.K. Sasikala Political Life



V.K. சசிகலா

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த விவேகானந்தன், கிருட்டிணவேணி தம்பதியினருக்கு 1956-ஆம் வருடம், ஜனவரி 29-ம் தேதி பிறந்தார்.  மேற்படி தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் அதில் சசிகலா ஐந்தாவது ஆவார்ஆரம்ப காலத்திலேயே தன் இனிஷியலுடன் தாயாரின் பெயரும் சேர்த்துக் கொண்டவர்.

சசிகலா

1. மூத்த சகோதரி வனிதாமணி- மகன்கள் டிடிவி தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன்.
2. மூத்த சகோதரர் சுந்தரவதனம் (வங்கி அதிகாரி)- மகன் டாக்டர் வெங்கடேசன், மகள் அனுராதா- ஜெயா டி.வி இயக்குநர் (தினகரனின் மனைவி).
3. வினோதகன்- இவரது மகன்கள் தஞ்சையில் உள்ள மகாதேவன், தங்கமணி.
4. ஜெயராமன்- இவரது மனைவி தான் ஜெயலலிதாவுடன் வசிக்கும் இளவரசி (ஹைதரா பாத்தில் ஜெயலலிதா கட்டிய பங்களாவை பார்வையிட சென்றபோது மின்சார விபத்தில் ஜெயராமன் உயிரிழந்ததால் இளவரசியை தன்னுடனேயே வைத்துக்கொண்டார் ஜெய லலிதா. இவர் மகன் விவேக்.
5. தம்பி- திவாகரன்.


                                   சசிகலா படித்த பள்ளி


திருத்துறைப்பூண்டியில் 1954-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி பிறந்த சசிகலா ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை அங்குள்ள பஞ்சாயத்துப் பள்ளியில் படித்துள்ளார். 1959, ஜுன் 7-ம் தேதி பள்ளியில், அதாவது முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறார் சசிகலா. பின்னர் 1965-ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி  6-ம் வகுப்பில் இணைந்துள்ளார். ஆனால் 10-ம் வகுப்பு படிக்கும்போது படிப்பை நிறுத்தியுள்ளார். ஆனால் சர்டிஃபிகேட்டை 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதிதான் வாங்கிச் சென்றுள்ளார்.



1970-71ம் ஆண்டுகளில் 59 பேர் மக்கள் தொடர்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் ம.நடராஜன். சசிகலா 1973-இல் அவரை திருமணம் செய்துகொண்டார். நடராசன் திமுக சார்பு உடையவராக இருந்தார். இவரின் திருமணத்தை திமுக தலைவர் மு. கருணாநிதி நடத்திவைத்தார்.


                              கணவர் நடராஜனுடன்

 நெருக்கடி நிலை காலகட்டத்தில் நடராசன் தன் பதவியை இழந்தார். நடராசன் பதவியை இழந்ததால் சசிகலா போயஸ் கார்டன் பகுதிக்கு அருகே ஒளிநாடாவை வாடகைக்கு விடும் “வினோத் வீடியோ விஷன் எனும் கடையை நடத்தினார். ஒளிநாடாவை வாடகைக்கு விடும் விடுவதோடு மட்டுமல்லாமல் நிழற்படக்கருவியை இயக்கும் முறையை அறிந்து கொண்டு திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு நிழற்படம் எடுத்தார்.

                                                                                 சந்திரலேகா IAS

ஜெயலலிதாவை தீவிர அரசியலில் ஈடுபடுத்த திட்டமிட்ட எம்ஜிஆர் 1983-ல் ஜெயலலிதாவை கொள்கைப் பரப்புச் செயலாளராக்கினார். சத்துணவு வாரிய உயர்மட்ட குழு உறுப்பினர் பதவியை வழங்கினார். அத்துடன் அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சந்திரலேகாவை ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கவும், அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து பயிற்சியளிக்கவும் நியமித்தார்.

ஜெயலலிதாவுக்கு சந்திரலேகா உற்ற துணையாக இருந்தார். இதே சூழ்நிலையில் சந்திரலேகா பணி யாற்றிய கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி யாற்றிய ம.நடராஜன், சந்திரலேகாவின் நம்பிக்கைக்குரியவரானார். அப்போது ஆழ்வார் பேட்டையில் பீமன் நகரில் உள்ள வீட்டில் நடராஜனின் மனைவி சசிகலாவும் அவரது தம்பி திவா கரனும் சேர்ந்து வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடை ஒன்றைத் நடத்தி வந்தனர். இந்தத் தகவலை நடராஜன், மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவுக்கு தெரியப்படுத்தி வைத்திருந்தார். அச்சமயத்தில் நடராசன் அப்போதைய தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவிடம் ஜெயலலிதாவை அறிமுகப்படுத்த வேண்டினார். நடராசனிடம் அதற்கு உடன்பட்ட சந்திரலேகா ஜெயலலிதாவிடம் சசிகலாவை அறிமுகப்படுத்தினார். முதலில் ஜெயலலிதாவுக்கு ஒளிநாடாக்களை வாடகைக்கு கொடுத்து வந்த சசிகலா பின் ஜெயலலிதாவின் கூட்டங்களை நிழற்படம் எடுக்கும் நிலைக்கு வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமைகளிலும், தன்னுடைய ஓய்வு நேரங்களிலும் சந்திரலேகா முழு மையாக ஜெயலலிதாவின் வீட்டி லேயே தங்கியிருப்பார். அப்போது, இருவரும் ஆங்கிலத் திரைப்படங் களைப் பார்ப்பது வழக்கம். அவற்றை நடராஜன், தன் மனைவி சசிகலா நடத்தி வந்த கடையிலிருந்து எடுத்துச்சென்று கொடுப்பார்.

அந்த ஆங்கிலத் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல தரமான பிரின்ட்க ளாகவும், புதுப் புது ஹாலிவுட் படங்களாகவும் இருப்பது குறித்து வியப்பு தெரிவித்த ஜெயலலிதா, சந்திரலேகாவிடம் உங்களுக்கு எப்படி இந்த படங்கள் கிடைக்கிறது என்று கேட்டுள்ளார். அப்போது, தனக்குக் கீழ் பணியாற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ம.நடராஜனின் மனைவி வீடியோ கேசட் வாடகை கடை நடத்தி வருவது குறித்து ஜெயலலிதாவிடம் சந்திரலேகா தெரிவித்தார். அதன்மூலம் தொடர்ந்து சசிகலாவே நேரடியாக ஜெயலலிதாவிடம் வீடியோ கேசட்டுகளை எடுத்துச் சென்று கொடுக்கும் அளவுக்கு நட்பு வளர்ந்தது.

இதனிடையே, ‘நமது கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பிரிந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள் எஸ்டிஎஸ், அழகு திருநாவுக்கரசு, மன்னை ஞானசேகரன் மற்றும் பலர் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டவுடன் மீண்டும் அதிமுக வில் இணைந்தனர். அந்த இணைப்புக்குப் பின்னர் தங்களை அரசியல் ரீதியாக தஞ்சை மண்டலத்தில் பலப் படுத்திக்கொள்ள திட்டமிட்டு மன்னார்குடியில் ஜெயலலிதாவை வைத்து பொதுக்கூட்டம் நடத்தலாம் என முடிவு செய்தனர். அதற்கு எம்ஜிஆரிடமும் ஒப்புதல் பெற்றனர். சசிகலாவின் உதவியுடன் ஜெயலலிதாவிடம் தேதி கேட்டனர். அதுவரை, எந்தவொரு அரசியல் விவகாரங்களிலும் தலையிடாத சசிகலா, முதன்முறையாக தனது சொந்த ஊரான மன்னார்குடியில் பொதுக்கூட்டத்துக்கு ஜெயலலிதாவிடம் கேட்டு தேதி பெற்றுத் தந்தார்.



‘நமது கழக’த்தில் இருந்து பிரிந்து வந்த தலைவர்கள் தங்களது செல்வாக்கை நிரூபிப்பதற்காக பெருமளவில் கூட்டத்தைத் திரட்டினர். மன்னார்குடி அரசியல் பொதுக் கூட்ட வரலாற்றில் இது போன்ற ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றதில்லை என்ற அளவுக்கு வரவேற்பு வளை வுகள், மின்னொளி அலங்காரம் என ஏற்பாடு செய்து அமர்க்களப் படுத்திவிட்டனர். இதைப் பார்த்து பிரமித்த ஜெயலலிதா, சசிகலாவை வெகுவாகப் பாராட்டினார். ‘நமது கழகம்’ கட்சித் தலைவர்களின் அரசியல் ஏற்றத்துக்கு இந்தப் பொதுக்கூட்டம் உதவிய தாகத் தெரியவில்லை. மாறாக, ஜெயலலிதா- சசிகலாவின் நட்புக்கு இந்தப் பொதுக்கூட்டம் நல்ல அடித்தளமிட்டுத் தந்தது.


இதற்குப் பின்னர்தான் ஜெயலலிதாவின் வீட்டிலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். இவரது நெருக்கத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவுடனான சந்திரலேகாவின் தொடர்பு குறைந்துவிட்டது. இந்த நிலையில் 1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்தார். அந்த துக்க நிகழ்வில் ஜெயலலிதாவுக்கு உற்ற துணையாக நின்று, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் எம்ஜிஆரின் துக்கத்தில் அவரது தலைமாட்டுக்கு அருகே கொண்டு சென்று ஜெயலலிதாவை நிறுத்தி வைத்ததுடன், அவருக்குப் பாதுகாப்பாக ஆட்களையும் நிற்க வைத்து உதவிபுரிந்தவர் சசிகலா.1988-இல் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கே குடிபெயர்ந்தார்.

                            பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவுடன்

எம்ஜிஆரின் மறை வுக்குப் பின்னால் ஜெயலலிதாவின் அரசியல் பணியில் ஆர்.எம்.வீரப்பனை எதிர்த்து, அதிமுக தலைமையைக் கைப்பற்ற திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.போன்ற தலைவர்கள் அரசியல்ரீதியாக உறுதுணையாக இருந்தனர். அப்போது தனிப்பட்ட முறையில் சசிகலாவும் உதவியாக இருந்தார். அழகு திருநாவுக்கரசு, மன்னை ஞானசேகரன் மற்றும் தன் குடும்பத்தினரின் உதவியுடன் ஆட்களை நியமித்து ஜெயலலிதாவை தொடர்ச்சியாக பாதுகாத்தவர் சசிகலா.


பொதுக்குழு உறுப்பினர் மற்றும் சின்னம்மா அவதாரம்




அக்டோபர், 24, 2000 அன்று, பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் காலை கூடிய அதிமுகபொதுக் குழுவில் ஜெயலலிதாவும், சசிகலாவும் கூட்டாக கலந்து கொண்டனர். ஒரே மாடல் புடவை அணிந்திருந்த இருவரையும் பூரண கும்ப மரியாதையுடன் கட்சித்தொண்டர்கள், தலைவர்கள் வரவேற்றனர். ஜெயலலிதாவை பெரியம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும் பொதுக்குழுவில் பேசிய அதிமுக பிரமுகர்கள் வர்ணித்தனர். அதிமுகவில் அதிரடி நடவடிக்கையாக, தோழி சசிகலாவை, ஜெயலலிதா பொதுக்குழு உறுப்பினராக்கி உள்ளார். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து திரைமறைவு அரசியல்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சசிகலாவுக்கு பகிரங்க அங்கீகாரம் அளித்துகட்சியின் பொதுக்குழு உறுப்பினராக்கி உள்ளார் ஜெயலலிதா. சசிகலாவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்த பின்னர் நடைபெறும் முதல் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வடபழனி விஜயசேஷ மகாலில் செவ்வாய் கிழமை காலைநடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், சசிகலாவும் ஒரே காரில் காலை 11.15 மணிக்கு வந்திறங்கினர்.

இப்போது அவரும் ஜெயலலிதாவுக்கு சமமாக ஒரே மேடையில் அமரும் வகையில்
அதிமுகவில் அவருக்கு அனுமதியும், அங்கீகாரமும் தரப்பட்டது

கட்சியிலிருந்து நீக்கம்

டிசம்பர் 19, 2011 அன்று சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் 12 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஜெயலலிதா  அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: 1. சசிகலா (தலைமை செயற்குழு உறுப்பினர்) 2. எம்.நடராஜன் 3. திவாகரன் (மன்னார்குடி) 4. டி.டி.வி.தினகரன் 5. வி.பாஸ்கரன் 6. வி.என்.சுதாகரன் 7. டாக்டர் எஸ்.வெங்கடேஷ் 8. எம்.ராமச்சந்திரன் 9. இராவணன் 10. மோகன் (அடையாறு) 11. குலோத்துங்கன் 12. ராஜராஜன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா கூறினார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடராஜன், சசிகலாவின் கணவர் ஆவார். திவாகரன், பாஸ்கரன், சுதாகரன், வெங்கடேஷ், ராவணன், ராமச்சந்திரன் ஆகியோர் சசிகலா மற்றும் நடராஜனின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள். மோகன், மிடாஸ் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசி கோர்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஜெ.,வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எல்லா முடிவுகளும் நானே எடுத்தது என்றார். இதுவும் ஜெ.,வுக்கு சற்று திருப்தியை தந்ததது.

2012 மார்ச்சில், ஜெயலலிதாவால் போயஸ் கார்டனிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, சசிகலா ஜெயலலிதாவிடம் பின்வருமாறு  மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் ஜெயலலிதாவுடன் சேர்ந்தார்.
சசிகலா  கடிதத்தில் என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து,எனது பெயரை தவறாகப் பயன்படுத்தி, சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர் என்பதையும், அதனால் கட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவர்களின் தவறான நடவடிக்கைகளால் பல குழப்பங்கள் உண்டாக்கப்பட்டன என்பதையும், கழகத்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கப்பட்டது என்பதையும்,அக்காவுக்கே எதிரான சில சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன என்பதையும், அறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியுற்றேன். மிகுந்த வேதனை அடைந்தேன். இவையெல்லாம் எனக்கு தெரியாமல் நடந்தவை என்பதுதான் உண்மை. சந்தித்த நாள் முதல் இன்று வரை, அக்கா நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு வினாடியும் நான் நினைத்திருக்கிறேனே தவிர, கனவிலும் நான் அக்காவுக்குத் துரோகம் நினைத்ததில்லை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம். அக்காவுக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான். இவ்வாறு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை. என்னைப் பொறுத்தவரை, அரசியலில் ஈடுபட வேண்டும் என்றோ, கட்சியில் பெரிய பொறுப்பு வகிக்க வேண்டும் என்றோ, சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்றோ, அமைச்சர் பதவியை அடைய வேண்டும் என்றோ, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றோ எனக்குத் துளியும் ஆசையில்லை. பொது வாழ்வில் பங்கு பெறவேண்டும் என்ற விருப்பமே எனக்கில்லை. அக்காவுக்கு உண்மையான தங்கையாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் வாழ்க்கையை ஏற்கெனவே அக்காவுக்கு அர்ப்பணித்து விட்டேன். இனியும், எனக்கென வாழாமல் அக்காவுக்காக என்னால் இயன்ற அளவுக்குப் பணி செய்து அக்காவுக்கு உதவியாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
ஜெயலலிதாவின் மறைவு

                               சென்னை ராஜாஜி ஹாலில்

அதிமுக பொதுச்செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.


சசிகலா குறித்து ஜெயலலிதா


''சசிகலா எனது சகோதரி போன்றவர். அவரிடம் எனது மனதில் உள்ள பல விஷயங்களையும் நான் பகிர்ந்து கொள்வேன். என் தாய் இப்போது உயிரோடு இருந்தால் என்னை எவ்வாறு பார்த்து கொள்வாரோ, அவ்வாறு சசிகலா என்னை பார்த்துக் கொள்கிறார்.'' என்று சசிகலா குறித்து ஒரு முறை ஊடகங்களிடம் பேசிய போது ஜெயலலிதா தெரிவித்தார்.


அவசர பொதுக்குழு





சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் 29,டிசம்பர்,2016 அன்று காலை 9.30 மணியளவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. பொருளாளரும், முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும் வந்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழு சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது. பொதுக்குழு மேடையின் நடுப்பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எப்போதும் பயன்படுத்தும் நாற்காலி போடப்பட்டிருந்தது. அதன் மேல் ஜெயலலிதா உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு கூட்டம் தொடங்கும் முன்பு அமைச்சர்களும், முக்கிய நிர்வாகிகளும் ஜெயலலிதா படத்துக்கு முன்பு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பொதுக்குழுவில் முதல் தீர்மானமாக மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 5-வது தீர்மானமாக புதிய பொதுச்செயலாளராக சசிகலாவை நியமிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழுவில் முதல் தீர்மானத்தை அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்மொழிந்தனர். இதனை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அன்புக்குரிய மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று நம்மிடையே இல்லை என்ற எண்ணமே நம் இதயங்களை கூரிய வாள் கொண்டு பிளக்கிறது. ஈடு செய்யமுடியாத இழப்பு, எத்தனை பெரிய இழப்பு அ.தி.மு.க.வுக்கும், தமிழக மக்களுக்கும். அவருக்கு இறைவன் ஆன்ம சாந்தியையும், நித்திய இளைப்பாறுதலையும் தந்தருள இந்த பொதுக்குழு கண்ணீர் மல்க வேண்டி பிரார்த்திக்கிறது. ஜெயலலிதாவின் நினைவை போற்றி இந்த பொதுக்குழு மவுன அஞ்சலி செலுத்துகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது கட்சி பாகுபாடுகள் இன்றி அவர் பூரண நலம் பெற உளப்பூர்வமாக பிரார்த்தித்ததை இந்த பொதுக்குழு நன்றியோடு நினைவுகூருகிறது. ஜெயலலிதாவை தங்கள் அன்புக்குரிய அம்மாவாக ஏற்று, உளமாற அன்பு செய்து வாழ்த்தி வணங்கும் ஒவ்வொருவருக்கும் இந்த பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்களை அக்கட்சி தனது பொதுக்குழு தீர்மானங்கள் மூலம் விளக்கியுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூடிய இக்கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம், "கழக சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை சசிகலாவிடம் தெரிவித்து அவரது சம்மதத்தை பெறுவதற்காக செல்கிறோம்" என்றார் ஓபிஎஸ்.இதையடுத்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் போயஸ் கார்டன் சென்றனர். அங்கு அவர் சசிகலாவிடம் பொதுக்குழு தீர்மான நகலை நேரில் வழங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்குமாறும் அழைப்பு விடுத்தார். தீர்மான நகலைப் பெற்றுக் கொண்ட சசிகலா, ஆசி பெறும்விதமாக அந்த நகலை ஜெயலலிதா உருவப்படம் முன்னர் வைத்தார். அப்போது அவர் கண்கலங்கினார். அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களில், சசிகலாவின் தலைமையின் கீழ் விசுவாசத்துடன் பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டது. .அதிமுகவை சசிகலா வழிநடத்துவது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'ஜெயலலிதா மறைந்த நிலையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் காப்பாற்றவும், வழி நடத்தவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் நியமனத்துக்கு பொதுக்குழுவின் ஒப்புதல்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொதுச்செயலாளராக பொறுப்பேற்றல்



31/12/2016 அன்று காலை அதிமுகவின் பொதுச்செயலாளராக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்கழகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் சசிகலா. இந்நிலையில், அதிமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் நோக்கர்களும் சமூக ஆர்வலர்களும் சசிகலாவின் குரலை, அவரது உரையை எதிர்பார்த்திருந்தினர்.

சசிகலாவின் அவரது உரை…

‘’தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டக்கழகச் செயலாளர்களே நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களே கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் நிர்வாகிகளே அனைத்திந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

அம்மா அவர்களை வணங்குகிறேன்

என் உயிரில் நான் சுமக்கிற அம்மாவை, எந்நாளும் நெஞ்சத்தில் சுமந்து வாழும் என் அன்பு சகோதர சகோதரிகளே, உலகமே வியக்கிற வெற்றிகளால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வழிநடத்திய நம் அம்மா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், கழகம்தான் தமிழகத்தை ஆளும் என நம் அம்மா முன்வைத்து சென்றிருக்கிற நம்பிக்கையை காப்பதற்காக இங்கே நாம் கூடியிருக்கிறோம்.

நமக்கெல்லாம் அடையாளமாக, நமக்கெல்லாம் பெருமைகள் பல தேடித்தந்து, இந்த இயக்கத்தின் இதயமாக, நம் ஒவ்வொருவரின் இதயத்தின் இயக்கமாக எனக்கு எல்லாமுமாய், எனக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த நம் இதயதெய்வம் அம்மா அவர்களை வணங்குகிறேன்.

நன்றி

புரட்சித்தலைவருக்குப் பிறகு, தாயாக நம்மை வழிநடத்திய தன்னிகரில்லா தலைவி அம்மா. இந்த மாபெரும் இயக்கத்துக்கு என்னை கழகப் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்து, அம்மாவின் வழியில் கழகப் பணியாற்றிட என்னை பணித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கனவிலும்கூட நினைக்காத ஒன்று

ஆயிரமாயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு மேலாக எத்தனையோ கூட்டங்களில் அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால், இன்று (கண் கலங்குகிறார்) மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல், எனக்கு உருவாகி இருக்கிறது. உங்களின் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமையும் கட்டாயமும் எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் கனவிலும்கூட நினைக்காத ஒன்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது. தலையில் இடிவந்து விழுந்ததைப்போல, நன்கு உடல் நலம் தேறி வந்த நம் அம்மா, நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் (குரல் தழுதழுக்கிறார்). தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர் இன்று தனது மரணத்தின்மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.

அம்மாதான் வாழ்க்கை

நம் அம்மாவுக்கு இந்த இயக்கம்தான் வாழ்க்கை. எனக்கோ அம்மாதான் வாழ்க்கை. (குரல் தழுதழுத்து கண்கலங்குகிறார்). ஆனால், இறைவன் தன் அன்பு மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டுவிட்டார்.

75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள் நம் அம்மாவை மீட்டுவிட வேண்டும் என்ற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடானகோடி தொண்டர்களாகிய நமது ஆன்மீக வழிபாடுகளும் ஒன்று சேர, அவை நம் அம்மாவை காப்பாற்றி விடும் என்று நான் உறுதியாக நம்பினேன்.

பாசத்தாயை இறைவன் பறித்துக் கொண்டான்

அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து, தனியறைக்கு வருகிற அளவிற்கு, அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும் தலைசிறந்த சிகிச்சைகள் மேற்கொண்டோம். லண்டன் மருத்துவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் மருத்துவர்களின் பிசியோதெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது. இன்னும் சில நாளில் அம்மாவை பூரண நலம்பெற்ற முழுமதியாக போயஸ் தோட்டத்துக்கு அழைத்து வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருந்த வேளையில், அம்மாவின் இதயத்துடிப்பை நிறுத்தி, பத்து கோடி மக்களின் பாசத்தாயை நம்மிடம் இருந்து இறைவன் பறித்துக் கொண்டான்.

இன்று நாட்டு அரசியலையே தென்னாட்டுப் பக்கம் திருப்பிக்காட்டிய ஒரு தேவதை இல்லாத அரசியல் மாடம் களையிழந்து நிற்கிறது. எனக்கோ அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்க்கதி நிலை. சில நிமிடம் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள் சில முறை மட்டுமே அம்மாவைப் பார்த்தவர்கள் சில விநாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்கள் அவர்களே அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களை கழித்துவிட்ட எனக்கு,(கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது) எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது (குரல் உடைந்து கலங்குகிறார்).

அம்மா என்கிற வார்த்தை

அம்மாவின் அரசியல் ஆரம்பகாலம் முதல் இதயதெய்வம் அம்மா அவர்களோடு தொடர்ந்து பயணித்தேன். (கலங்குகிறார்). அப்போது யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்கள். அம்மா என்கிற வார்த்தை இந்த அளவுக்கு மக்களின் இதயத்தை ஊடுருவும் என்று.

ஆனால், இத்தனை ஆண்டுகள் அவரோடு இருந்த என் ஆசை எல்லாம் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான். ’அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா? அக்கா மதிய சாப்பாட்டிற்கு என்ன வேண்டும்?’ என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்பு வேலையிலேயே என் வாழ்நாட்களை செலவழித்தவள் நான்.

எனக்கு இப்போது 62 வயது ஆகிறது. கடந்த 33 ஆண்டுகளாக, என்னுடைய 29வது வயது முதல் நம் இதய தெய்வம் அம்மாவோடுதான் இருந்துள்ளேன். அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிகமிகக்குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதைவிட அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும்.(கலங்கி கண்ணீர் வழிகிறது)

அம்மாவும் கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை எஞ்சியிருக்கும் காலத்தை அம்மா கட்டிக் காத்த கழகத்திற்காகவும் கோடான கோடி கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது.

அம்மா சொன்ன செய்தி

அம்மாவுக்கென்று ஆசைகள் இருந்தது. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருந்தது. அது, இந்த இயக்கம் வாழ வேண்டும். தமிழ் மக்களை இந்த இயக்கம் வாழவைக்க வேண்டும் என்பதுதான். இத்தனைஆண்டுகாலமாக அது நிறைவேறியது இனிமேலும் அது நிறைவேறிக்கொண்டுதான் இருக்கும்.

தனக்குப் பின்னால், ’இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்’ என்று சட்டமன்றத்திலே நம் அரசியல் எதிரிகளுக்கு முன்னால், நம் அம்மா சிங்கம் போல கர்ஜித்தார். அது அவர்களுக்கு மட்டும் பதிலல்ல, அம்மா இந்த உலகுக்கே சொன்ன செய்தி அது.

தாயை இழந்த பிள்ளைகள்

எத்தனையோ போராட்டங்கள். அரசியல் நெருக்கடிகள். எதிரிகளின் சூழ்ச்சிகள், ஏற்றத்தாழ்வுகள். என எவ்வளவோ வந்த போதிலும், அதிலெல்லாம் அம்மா வென்று வருவார். நான் உறுதுணையாக இருப்பேன். ஆனால், இன்று, தாயை இழந்த பிள்ளைகளாய், நாம் தவித்துக் கொண்டு இருக்கிறோம். உங்களில் பலரின் செயல்பாடுகளை பண்புகளை அம்மா என்னிடம் பகிர்ந்துகொள்வார். எப்போதும் செயல்பாட்டையும் விசுவாசத்தையும்தான் நம் அம்மா இதயதெய்வம் நம்மிடம் எதிர்பார்த்தார்கள். சில நேரங்களில் அவற்றை கூடுதலாகவே எதிர்பார்த்தார்கள். அதற்குரிய வாய்ப்புகளையும் அவர் ஏற்படுத்தித்தான் தந்தார்கள். அத்தகைய நம் அம்மாவின் எதிர்பார்ப்புதான், நம்மை இயக்கும் சக்தியாகத் திகழ்ந்தது. அது தொடர்ந்து அமைந்திட வேண்டும். அணையா நெருப்பாக நாம் ஒவ்வொருவரும் இதயத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

பெண் இனத்திற்கான நம்பிக்கை

அடிப்படையில் அம்மா துணிச்சலின் பிறப்பிடம். அன்றைக்கு ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் இந்தியா முழுவதும் தேடினாலும் ஒரு இந்திராவைத் தவிர வேறொருவர் இல்லை என்ற நிலையில், நம் அம்மாவின் அரசியல் பிரவேசம், பெண் இனத்திற்கே ஒரு வழிகாட்டுதலையும் வலிமையையும் நம்பிக்கையையும் கொடுத்தது.

அரசியல் மாடங்களில் பெண்கள் பங்கேற்று பெரும் புகழ் சேர்க்க முடியும் என்ற புரட்சிகர வரலாறு நம் அம்மாவால்தான் உருவானது. இந்த இயக்கத்தின் பெரும் ஊக்க சக்தியே தாய்மார்கள்தான் என்பதைக் கண்டு உலகமே வியக்கிறது என்றும், அம்மாவுக்குப் பிறகு ஒரு பெண்ணாக, நான் கழகத்தின் பொதுச்செயலாளர் கடமையை ஆற்றுவதற்கு முன் வந்திருக்கிறேன் என்று சொன்னால், அதற்கு மிக முக்கியமான காரணம் கோடான கோடி சகோதர சகோதரிகள் எனக்கு பக்க துணையாக நிற்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான்,

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்…

தந்தை பெரியாரின் தன்மானம், பேரறிஞர் அண்ணாவின் இனமானம், புரட்சித்தலைவரின் பொன்மனம் இவையாவும் ஒருங்கே பெற்ற நம் புரட்சித்தலைவி அம்மாவின் போர்க்குணத்திற்கு ஈடு இணையாகிட ஒருவராலும் முடியாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நிரப்பவே முடியாது. ஆனாலும் நம் அம்மா, நமக்குக் கற்றுத் தந்திருக்கிற அரசியல் பாடங்களை அவரது பாதத்தடங்களை வேதமெனப் பின்பற்றுவோம்.

அம்மா அவர்கள் நிர்மாணித்த இந்த இயக்கம், மக்களின் இயக்கம். இந்த அரசு மக்களின் அரசு. அவர் காட்டிய வழியில்தான் நம் பாதை. அவர் காட்டிய பாதையில்தான் நமது பயணம்.

இயக்கத்தின் அடையாளம்

பேரறிஞர் அண்ணா, இதயதெய்வம் புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி இவர்கள்தான் இந்த மாபெரும் இயக்கத்திற்கு அடையாளம். இவர்களைத் தவிர, வேறு யாரும் இங்கே முன்னிலைப் படுத்தமாட்டார்கள் என்பது உறுதி. நம் புரட்சித் தலைவரும் சரி, நம் புரட்சித் தலைவி அம்மாவும் சரி, சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட மாபெரும் தலைவர்கள். அவர்களின் அந்த மகத்தான வழியில்தான், இந்த இயக்கம் இன்றுவரை பயணித்திருக்கிறது. இனியும் அதே வழியில்தான், வீறு நடை போடும்.

உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு

நம் அம்மா எந்த வேகத்தில் இந்த இயக்கத்தை வழி நடத்தினார்களோ, அதே வேகத்தோடு, எந்த ராணுவக் கட்டுப்பாட்டோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நம் அம்மா வைத்திருந்தார்களோ, அதில் கடுகளவும் குறையாத, அதே கட்டுப்பாட்டோடு, உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வளித்து அழகு பார்க்க எந்த அளவுகோலை நம் அம்மா கொண்டிருந்தார்களோ, அந்த அளவுகோலோடு நம் அம்மா காட்டிய வழியில் இருந்து இம்மிகூட விலகாமல், இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம்.

இயக்கத்தின் உயிர்நாடி

கனி வெளியே தெரியும். காய் வெளியே தெரியும். பூ வெளியே தெரியும். இலை வெளியே தெரியும். கிளை வெளியே தெரியும். ஆனால், இதையெல்லாம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் வேர் வெளியே தெரியாது. அந்த வேர்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற இந்த இமயப் பேரியக்கத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் அப்பழுக்கில்லா கோடான கோடி தொண்டர்கள். அவர்களின் உழைப்புத்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி என்பதை உணர்ந்து, கழகத்தின் தொண்டர்களை நம் கண் இமையாகக் காப்போம்.

சூழ்ச்சிகளை முறியடித்து

தமிழக மக்களால், ஆராதிக்கப்படுகிற கழக அரசின் மீதான மக்களின் அன்பில் குன்றிமணி அளவுக்குக்கூட குறை வராது பாதுகாப்போம். நம் கருணைத் தாயின் மறைவில் அந்த சரித்திரத்தின் நிறைவில் கழகத்தை வீழ்த்திடலாம் என்று கணக்குப் போட்ட சூது மதியாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து, ’தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர் வழி சென்றால், நாளை நமதே.’ என்ற மக்கள் திலகத்தின் வாய்மொழியையே நாம் எந்நாளும் தாய்மொழியாக ஏற்போம்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, ஜனவரி மாதம் 17ஆம் தேதி அன்று தொடங்குகிறது. இவ்விழாவினை நாடு போற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்பது புரட்சித்தலைவி அம்மாவின் கனவாக இருந்தது. அம்மா அவர்களின் கனவை நிறைவேற்றும் வண்ணம், புரட்சித் தலைவரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, கழகத்தின் சார்பில் ஆண்டு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

புரட்சித்தலைவர் பிறந்தநாள் நூற்றாண்டு நினைவாக சிறப்பு அஞ்சல் தலையும் அவரது திருவுருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு நாணயமும் வெளியிட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அம்மாவின் ஆன்மா

ஒன்றை மட்டும் இந்த நேரத்தில் நிறைவாகவும் உறுதியாகவும் சொல்ல விரும்புகிறேன். நம்மை இன்று விமர்சிப்பவரும்கூட நாளை மனமுவந்து நம்மை பின் தொடரும் அளவுக்கு ஒரு புனிதமான பொதுவாழ்வை நாம் மேற்கொள்வோம்.

இன்னும் எவ்வளவு காலம் நான் வாழ்கிறேனோ, அதன் முழுமையையும் கழகத்தின் நலத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் உரித்தாக்கிக்கொண்டு உழைப்பேன்.

ஒண்றரைக் கோடி பிள்ளைகளை உன் வசத்தில் ஒப்படைத்திருக்கிறேன் என்று அம்மாவின் ஆன்மா என் அருகில் இருந்து ஆணையிடுவதாகவே என்றும் நான் உணர்கிறேன். (கலங்குகிறார்).

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் லட்சியக் கனவுகளை உயிராகக் காப்பதற்கு நாம் அனைவரும் இந்நாளில் உறுதி ஏற்போம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக என்னை ஒரு மனதாகத் தேர்வு செய்திருக்கும் உங்களின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப, என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன்.(அழுகையோடு பேசுகிறார்).

அம்மா வழியில்
நமது பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அம்மா வழியில் பின்பற்றுவோம். அம்மா அவர்கள் வகுத்துத் தந்திருக்கும் நெறிமுறையில் நெல்முனையளவும் மாறாமல், இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளராக பணியாற்றுவேன் என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொண்டு, என்னுடைய பணிகள் எல்லாம் வெற்றிபெற உங்களின் ஒத்துழைப்பும் இறைவனின் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறேன்.


தந்தை பெரியாரின் தன்மானம். பேரறிஞர் அண்ணாவின் இனமானம். புரட்சித்தலைவரின் கனிவு. புரட்சித்தலைவி அம்மா நமக்கு போதித்த துணிவு இவற்றையே உயிராக உணர்வாக போற்றுவோம். எங்கள் அம்மா புகழை இப்புவியே சொல்லும். எப்படை வரினும் இப்படையே வெல்லும். என்று உறுதி கூறி மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட நம் அம்மாவின் வழியில், நம் பயணத்தை மேற்கொள்வோம். நன்றி. வணக்கம்.” என்று உணர்ச்சிப் பெருக்கோடு அரசியல் வாழ்வின் தனது தொடக்க உரையை உருக்கமாக நிதானமாக நிகழ்த்தினார் சசிகலா..

அதிமுக பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்ந்தார் சசிகலா



அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நடராஜன் 2016, டிசம்பர் 31 ஆம் தேதி பதவியேற்றார். மக்களின் பெரும் எதிர்பார்பிற்கிடையே இப்பதவியை ஏற்றுள்ளார். ஜெயலலிதாவின் பணியை அதே மூச்சுடன் தொடர்வார் என்ற நம்பிக்கை தொண்டர்கள் மத்தியில் நிலவியிருந்தது.




சொத்துக்குவிப்பு வழக்கு

1996 ஜூன் 14 அன்று, 1991-1996-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடர்ந்தார். ஜூன் 31-ம் தேதி மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக இருந்த லத்திகா சரணை விசாரிக்க உத்தரவிட்டார். அவ்விசாரணையின்படி ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் இதே வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து இதே பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டனர். அப்போது ஜெயலலிதாவின் கைதி எண் 7402 ஆகும். சசிகலாவுக்கு 7403 என்ற கைதி எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நான்கு பேரும், கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மற்றும் ஜாமீன் கேட்டு மனு செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததால், அக்டோபர் 17ஆம் தேதி 4 பேருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 21 நாள்கள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சரணடைந்த சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். சசிகலாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள கைதி எண் 9,234 ஆகும். மேலும் சசிகலாவுடன் இளவரசியும் சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருவரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு 9934 என்ற எண்ணும், இளவரசிக்கு, 9935 என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. சுதாகரனுக்கு 9936 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது.


சசிகலா சபதம்


ஜெயலலிதா சமாதிக்கு சென்று பூ தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். இதைத் தொடர்ந்து ராமாபுரம் சென்ற சசிகலா, அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் வீட்டில் இருந்த எம்ஜிஆர் படத்துக்கு கீழே அமர்ந்து சசிகலா சிறிது நேரம் தியானம் செய்தார். இதையடுத்து, அங்கிருந்து பெங்களூரு நீதிமன்றத்துக்கு காரில் சசிகலா, இளவரசி ஆகியோர் சென்றனர்.



CP.சரவணன், வழக்கறிஞர்.