Friday 23 December 2016

தேர்தல் வரலாறு-3 தாதாபாய் நௌரோஜி

தாதாபாய் நௌரோஜி – ‘முதல் பாராளுமன்ற உறுப்பினர்’


“இந்தியாவின் பெருங்கிழவர்” (கிழவன் என்றால் தலைவன் எனவும் பொருளுண்டு) The Grand Oldman of India என்று அழைக்கப்பட்ட தாதாபாய் நௌரோஜிக்கு உலக அரசியல் வரலாற்றில் ஒரு சிறப்பிடம் உண்டு. இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதாவது இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், ஆசிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறப்பினர் இவர்தான்.

படம்

தாதாபாய் நௌரோஜி, 1825-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் நாள் பம்பாயில் பிறந்தவர். அவரது தந்தை நௌரோஜி பலஞ்சி டோர்ஜி. ஜொராஸ்ட்ரியன் மதத்தைச் சார்ந்த பார்ஸி இனத்தவர். அவரது தாயார் மேனக் பாய். 1845-ம் வருடம், சர் எர்க்சைன் பெர்ரி எனும் பம்பாய் தலைமை நீதிபதி, சர் ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாயி இருவரும் சேர்ந்து நெளரோஜியை சட்டம் படிக்க இங்கிலாந்துக்கு அனுப்பினர்.


சட்டப் படிப்பு முடித்து, 1950-ல் பம்பாய் திரும்பியவுடன், மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்கை தத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். 1851-ல், சமாசார் தர்பன் (Samachar Durpan) என்ற குஜராத்திப் பத்திரிகையில் எழுதத் தொடங்கிய அவர், பின்னர் ராஸ்ட் கோஃப்தர் (Rast Goftar) என்ற நாளிதழைத் தொடங்கினார். தொடர்ந்து, தியான் பிரசாரக் (Dyan Prasrak) என்ற பத்திரிகையிலும் எழுதினார். ஜொராஸ்ட்ரியன் மதத்தைப் புனிதப்படுத்த ஒரு சபையை ஏற்படுத்தினார். 1854-ல் Truth Teller என்ற மாதமிருமுறை இதழையும் ஆரம்பித்தார். பம்பாயில் ஞானப்பிரசார சபை, அறிவியல் மற்றும் இலக்கிய சங்கம், பார்ஸி உடற்பயிற்சிப் பள்ளி, விதவையர் சங்கம் போன்றவற்றை ஏற்படுத்தினார்.


1866-ல் லண்டனில், கிழக்கு இந்தியச் சங்கத்தைத் தோற்றுவித்தார். அதில், இந்தியாவைச் சேர்ந்த உயர் உத்தியோகஸ்தர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர், ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர்கள் படும்  துயரத்தை லண்டனில் வெளிப்படுத்தினார்.

1872-ம் ஆண்டு, இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தை (சீர்திருத்தம் செய்ய பல முயற்சிகள் செய்தார். 1873-ல் பரோடா அரசரின் திவானாகப் பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகி மீண்டும் லண்டன் சென்றார். பின்னர் 1875 மற்றும் 1883-ல் பாம்பாய் மாநகராட்சி உறுப்பினராக பணியாற்றினார்.

1875-ம் ஆண்டு, பாம்பே மாநகராட்சி உறுப்பினராகவும், 1864-ல் பம்பாய் பல்கலைக் கழகத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1883-ம் ஆண்டு மாநகராட்சி உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1883-ம் ஆண்டு “Voice of Bombay” என்ற பத்திரிகையை தொடக்கினார். 1885-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், ரீ பிரபு  (Lord Reay) என்பவரால், பம்பாய் சட்டமன்றத்தில் கூடுதல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1885, டிசம்பர் 27 முதல் 29 வரை நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் முதல் கூட்டத்தை தலைமையேற்று நடத்தினார்.
சில மாதங்களுக்கு பின், ஆங்கிலேய நண்பர்களின் உதவியுடன் இங்கிலாந்து சென்றவர், அங்கு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சித்தார். ஹால்பர்ன் லிபரல் சங்கத்தின் உதவியுடன், 1886-ம் ஆண்டு ஹால்பர்ன் மண்டலத்தைச் சேர்ந்த  ஃபின்ஸ்பரி (Finsbury) தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட ஒப்புக்கொண்டார். ஆனால், தேர்தலில் 1950 வாக்குகள் மட்டுமே பெற்று டங்கன் (Col. Duncan) என்பவரிடம் தோற்றுப்போனார்.


இந்திய தேசிய காங்கிரஸ்

1885-ம் ஆண்டு A.O. ஹியூம், W.C. பானர்ஜி ஆகியோருடன் சேர்ந்து அவர் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார். 1886, 1893, 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில், இந்திய தேசிய காங்கிரஸுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாலகங்காதர திலகர், காந்தி உட்பட நாட்டின் முன்னணித் தலைவர்கள் பலர், தாதாபாய் நௌரோஜியை பெருந்தலைவராகப் போற்றியதுடன், தங்களது வழிகாட்டியாகவும் கருதினர். காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவுக்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும்

தாதாபாய் நௌரோஜி எழுதிய "பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும் இந்தியாவின் வறுமையும்" (Poverty and Un British Rule in India) என்ற நூலில், இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரி விதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும், வெள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றதை புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார்.

The manners and customs of the Parsees (Bombay, 1864), The European and Asiatic races (London, 1866), Admission of educated natives into the Indian Civil Service (London, 1868), the wants and means of India (London, 1870), Condition of India (Madras, 1881), Poverty of India, Dadabhai Naoroji (1901). Poverty and Un-British Rule in India போன்ற நூல்களையும், "The Benefits of British Rule", in a modernised text by J. S. Arkenberg, ed., on line at Paul Halsall, ed., Internet Modern History Sourcebook. Lord Salisbury's Blackman (Lucknow, 1889), Naoroji, Dadabhai (1861). The Parsee Religion. University of London போன்ற கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்

பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு, 1892-ம் ஆண்டு ஜூலை 6-ல் நடைபெற்ற தேர்தலில், கேப்டன் பென்டனை 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற இங்கிலாந்து ராணியின் அமர்வு முன்பு கேப்டன் பென்டன் மேல்முறையீடு செய்தார். பல்வேறு ஆய்வுக்குப் பின் 2 வாக்கு வித்தியாசத்தில் நெளரோஜி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வாறு, பிரிட்டன் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே. 1895 வரை உறுப்பினராக இருந்தார். கிறிஸ்தவராக இல்லாததால், பைபிள் மீது சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. ஜொராஸ்ட்ரியன் மதத்தினரின் வேதமான 'அவெஸ்டா' என்ற நூலின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் பலமுறை, பிரிட்டன் பாராளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக நௌரோஜி தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, முதல் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் இவரே ஆவார்.


(நன்றி - The First Indian Member of Imperial Parliament, 1892)

No comments:

Post a Comment