Sunday 25 December 2016

தேர்தல் வரலாறு-7 இந்திய தேசிய காங்கிரஸ்

இந்திய தேசிய காங்கிரஸ்


ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (Allan Octavian Hume)

ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் 6 ஜூன் 1829  இங்கிலாந்தின் கென்ட் நகரில் ஜோசப் - மரியா தம்பதியின் எட்டாவது குழந்தையாக பிறந்தார். தந்தை ஜோசப் ஹியூம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஒரு தீவிர உறுப்பினராக இருந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்ததும் ஆலன் ஓர் .சி.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்று இந்தியாவில் 1850-ல் உத்தரப் பிரதேசத்தில் பணியைத் தொடங்கினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை துவக்கக் காரணமானவர்களில் இவரும் ஒருவர்.
1870 முதல் இந்திய அரசின் செயலராக பணியாற்றினார். ஆங்கில அரசாங்கம் மேற்கொண்ட  சீர்கேடான நடவடிக்கைகளை ஆலன் வலுவாக எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, மதுக்கடைகளை ஆங்காங்கு விரிவுபடுத்தி அதனால் கிடைக்கும் ஏராளமான வருவாயை அரசாங்கம் ஆண்டுதோறும் பெருக்கிக் கொள்வதை ஆலன் கண்டித்தார். அதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஏழைகளின் குடும்பங்கள் படும் துன்பங்களைத் தவிர்க்கும் வகையில் அரசாங்கம் தனது வரி வசூலை மட்டும் கவனித்துக் கொண்டிராமல் மக்களின் நலன்களையும் கவனிக்க வேண்டும் என்று 1860 மே மாதத்தில் ஆலன் எழுதிய அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
ஆலன் தந்த ஆலோசனைகளையும், முற்போக்கான திட்டங்களையும் அப்பொழுது இருந்த ஆங்கில மேலதிகாரிகள் பலர் புறக்கணித்தாலும், வைஸ்ராய் பதவிக்கு வந்த மேயோ பிரபு, ரிப்பன் பிரபு போன்றோர் ஆலனின் ஆலோசனைகளை வரவேற்றார்கள். விவசாயத் துறையை மேம்படுத்த ஆலன் அளித்த ஆய்வறிக்கைகளைப் பார்த்த மேயோ பிரபு, அவற்றை நிறைவேற்ற ஆலன்தான் பொருத்தமானவர் என்று முடிவெடுத்து 1870-ல் ஆங்கில அரசின் வைஸ்ராய் தலைமையகத்தில் விவசாயம், வருவாய், வணிகம் உள்ளிட்ட துறையில் செயலாளராக ஆலன் நியமிக்கப்பட்டார். 1876-ல் வைஸ்ராயாக வந்த லிட்டன் பிரபுவுடன் ஆலனால் பல பிரச்னைகளில் ஒத்துப்போக இயலவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு வணிக ஒப்பந்தங்களில் இந்தியாவுக்கு ஏற்படவிருந்த பெரும் இழப்புகளை ஆலன் சுட்டிக்காட்டினார்.
மேலும், 1876-78-ல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஒரு கோடி மக்கள் மாண்டனர். அதற்கான தீர்வு ஆலன் தந்த பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை லிட்டன் பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. உடனே, ஆலன் செயலாளர் பணியிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டு அப்பொழுது இருந்த வடமேற்கு மாகாணத்தின் வருவாய்த் துறை வாரியத்தின் இளநிலை உறுப்பினராக அனுப்பப்பட்டார். அப்பொழுது இருந்த பத்திரிகைகள் அனைத்தும் கடுமையான முறையில் ""மிக நேர்மையான ஓர் அதிகாரி ஆட்சியாளர்களால் மிக மோசமாக நடத்தப்பட்டார் என்று கண்டித்தன.
1882 ஜனவரி முதல் நாளில் தமது அரசாங்கப் பதவியை ஆலன் துறந்துவிட்டார். ஆங்கில அரசாங்கம் இந்தியர்களுக்குச் செய்து வரும் அநீதிகளை வெளிப்படுத்தி தக்க முன்னேற்றத்தைத் தர வேண்டும் என்பதை வலியுறுத்த இங்கிலாந்து சென்று, அங்கு இந்தியா பற்றிய ஓர் அமைப்பை உண்டாக்க அவர் திட்டமிட்டார். ஆனால், வில்லியம் வெட்டர்பர்ன் போன்று இருந்த நண்பர்கள் இங்கிலாந்துக்குச் செல்வதைவிட இந்தியாவிலேயே இந்திய மக்களுக்காக ஓர் அமைப்பை உருவாக்குவது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள். இந்தியாவின் உரிமைகளை நிலைநாட்டவும், இந்தியாவை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்லவும் தக்கதொரு அமைப்பை உருவாக்க ஆலன் எடுத்த முதல் முயற்சி, கோல்கத்தா பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளுக்கு 1883, மார்ச் 1-ல் சிறந்ததொரு வெளிப்படையான வேண்டுகோளை வெளியிட்டார்.

வில்லியம் வேட்டர்பர்ன்
வில்லியம் வேட்டர்பர்ன், ஜான் வெட்டர்ன்பர்ன் ஹென்றியேட்டா லூயிஸ் மில்பர்ன் தம்பதியினருக்கு மகனாக 25,மார்ச் இல்பிறந்தார். இந்தியன் சிவில் சர்வீசில் 1860 ஆம் ஆண்டு சேர்ந்து  பணியாற்றினார். ஆலன் ஆக்டேவியன் ஹூயூமுடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக பாடுபட்டார்.


 1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான் இதன் குறிக்கோளாக இருந்தது. உமேஸ் சந்திர பானர்ஜிசுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன்  ஆக்டவியன்  ஹியூம், வில்லியம் வெட்டர்பர்ன், தின்சா வாச்சா,  ஆகியோரின் கூட்டு முயற்சியால் தொடங்கப்பட்டது. காங்கிரஸின் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் காலரா  நோய் புனேயில் பரவி இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் சுப்பிரமணிய ஐயர் இந்தியாவின் முன்னணி இதழியலாளர்களில் ஒருவர். இவர் செப்டம்பர் 20, 1878 இல் தி இந்து என்ற செய்தி இதழை நிறுவி 1898 வரை அதன் உரிமையாளர், மேலாண்மை இயக்குநர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தவர். சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச், 1882 இல் தொடங்கினார். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு முன்மொழிந்தவர் ஆவார். திருநெல்வேலியைச் சார்ந்த பீட்டர் பால் பிள்ளையும் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டார்.


இதன் இரண்டாம் கூட்டம் 1888 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, . . சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது.
1885 முதல் 1908 வரை நடந்த காங்கிரஸ் மாநாடுகளின் விவரங்கள் பின்வரும் அட்டவணையில்:




சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் (C. Vijayaraghavachariar)


சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்  என்றழைக்கப்படும் சக்கரவர்த்தி விஜயராகவாச்சாரியார்  ஒரு அரசு ஊழியர் மற்றும் வழக்கறிஞரும் ஆவார். 1875 இல் சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். 1882 ஆம் ஆண்டில் சேலம் மாநகர சபை உறுப்பினராக அரசியல் நுழைந்து, 1895 இல் சென்னை மாநிலக் கவுன்சில் உறுப்பினராகவும் 1913 இல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் . 1882-ல் நடைபெற்ற சேலம் இனக்கலவரத்தில் குற்றவாளியாகக் கருதப்பட்டு 10 ஆண்டுகள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டு சிறைத்தண்டனை பெற்றார். இதனால் தனது நகரமன்றப் பதவியினையும் இழந்தார். சிறையிலிருந்தபடியே தான் குற்றமற்றவர் என வாதாடி விடுதலையானவர். இதனால் 'சேலத்து நாயகன்' எனவும் 'தென்னிந்தியாவின் சிங்கம்' எனவும் பாராட்டப்பட்டவர். மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு காங்கிரசின் அரசியலமைப்பு வரைந்தார்.


அன்னி பெசன்ட்


1907 ஆம் ஆண்டில் சூரத் நகரில் இடம்பெற்ற இந்திய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் ஏற்படவிருந்த பெரும் பிளவைத் தவிர்த்து, லக்னோவில் இடம்பெற்ற மாநாட்டில் இரு பிரிவினரையும் இணைத்து வெற்றி கண்டார். ஹோம் ரூல்  இயக்கத்தை தொடங்கினார். நாடு முழுவதிலும் அதன் கிளைகள் உருவாயின. அன்னி பெசன்ட் தனது தலைமைப் பதவிக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, விடுதலை இயக்கத்தை வலுப்பெறச் செய்தார்.அன்னி பெசன்டின் சுற்றுப் பயணங்களுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் ஆங்கிலேய அரசு தடை செய்தது. 1917, ஜூன் 15 ஆம் நாள் ஏனைய காங்கிரஸ் தலைவர்களுடன் அன்னி பெசன்டையும் கைது செய்தது.  டிசம்பர் 1917 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக ஓராண்டிற்குத் தேர்வானார். லாகூரில் ஜவகர்லால் நேருவின் தலைமையில் 1929 இல் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் முழுமையான சுயாட்சி கோரி அறிக்கை வெளியானது. காங்கிரஸ் சோசலிச சார்பாக கருத்துக்களை வெளியிட்டமை அன்னி பெசன்டின் கொள்கைகளுக்கு உரியதாக இருக்க வில்லை.




திவான் பகதூர் பி.கேசவ பிள்ளை காங்கிரசுக்கு பெரும் தொண்டாற்றினார். இவர் 1917-இல் ராஜினாமா செய்தார். தேசபந்து என்றழைக்கப்படும் சித்தரஞ்சன் தாஸ் 1919-1922 வரை தீவிரமாக ஒத்துழையாமை இயக்கத்திற்காக உழைத்தார். பிரிட்டிஷ் துணிகளை தடை செய்வதை முதன்முதலில் ஊக்குவித்தார். பின்பு காங்கிரசிலிருந்து விலகி மோதிலால் நேருவுடன் இணைந்து “ஸ்வராஜ் பார்டியை துவக்கினார்.


1866 ஆம் ஆண்டு மே 9 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில் பிறந்தார், கோகலேவின் குடும்பம் சித்பாவன் பிராமணர்களாக இருந்தபோதிலும் ஏழ்மையில் இருந்தது. சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரணடேவின் ஆதரவாளராக கோகலே 1889 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினரானார். 1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, இந்தியச் சேவகர்கள் அமைப்பினை ஏற்படுத்தினார், "இந்தியச் சேவகர்கள் அமைப்பினர், நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கும் நபர்களை சமய ஆர்வத்துடன் தயார்படுத்தி, இருக்கும் எல்லா சட்டமைப்பு முறையின் கீழ் இந்திய மக்களின் தேசிய உணர்வுகளை ஊக்குவிக்கும்."


பால கங்காதர திலகர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் நாள் மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் பிறந்தார். தந்தையார் கங்காதர் ராமசந்திர திலக். இந்திய காங்கிரஸ் ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கழித்து திலகர் 1889-ஆம் ஆண்டில் காங்கிரஸில் சேர்ந்தார். 1907-ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டாகப் பிரிந்தது. மிதவாதிகள் தங்களை ஆள்பவர்கள் ஆங்கிலேயர்கள் என்பதை எப்போதும் நினைத்திருந்தார்கள்.அமிதவாதிகள் தங்களை ஆள்பவர்கள் அந்நியர்கள், சுதந்திரம் தங்களது பிறப்புரிமை என்று நினைத்தார்கள். திலகர் அமிதவாதிகள் தலைவரானார். அவர் செயலற்று இருப்பதை விரும்பவில்லை. ஆங்கில ஆட்சியை எதிர்த்து தொடர்ந்து மக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

லாலா லஜபதி ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில், இன்றைய மோகா மாவட்டத்தில் அமைந்திருக்கும் துதி கே என்னும் ஊரில் பிறந்தார். இவர் 1888 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். அக்காலத்தில், தீவிரமான இந்து தேசியவாதிகளாக விளங்கிப் போராட்டக் காலத்திலேயே தமது உயிர்களைக் கொடுத்த முக்கியமான மூவருள் இவரும் ஒருவர்.,

வங்காளத்தைச் சேர்ந்த பிபன் சந்திர பால் 1886- ல் காங்கிரஸில் சேர்ந்தார். சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'லால்-பால்-பால்' என்ற திரிசூலமாகக்   கருதப்பட்டவர்கள்  லாலா லஜபதிராய், பாலகங்காதர திலகர், பிபின் சந்திர பால் ஆகியோர். சுதந்திரம் என்பது பிச்சையிட்டு வாங்குவது அல்ல; போராடிப் பெற வேண்டிய பிறப்புரிமை என்று முழங்கினர்




மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். 09.01.1915 ல் இந்தியா திரும்பினார், அந்த நாள் வெளிநாடு வாழ் இந்தியர் தினம் என அனுசரிக்கப்படுகிறது. 1924ல் - இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.



உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள். 1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசு கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளை சந்தித்தார். காந்தியடிகளுடன் சேர்ந்து காங்கிரஸிக்கு தொண்டாற்றினார்.



சர்தார் வல்லப்பாய் படேல் .31.10.1875 குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தாங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் 1884, அக்டோபர் 4 ஆம் நாள் 'சிவம்' என்றும், 'சிவா' என்றும் அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவா பிறந்தார். இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள்(நாகலட்சுமி. 1920 இல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப்  பிரதிநிதியாகச்  சென்றார்.  1921 ஆம் ஆண்டு முதல்  துறவி போன்று காவியுடை அணியத் துவங்கினார். ஸ்வதந்ரானந்தர் என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு பாரதபுரம் என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்ரஞ்சன் தாசை கொண்டு செய்வித்தார். கோயில் கட்டுமானம் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது.






சத்தியமூர்த்தி ஆகஸ்டு 19,1887 அன்று புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் என்ற ஊரில் பிறந்தார். சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பின்னர் சட்டம் பயின்றார். கல்லூரி நாட்களிலேயே கல்லூரி தேர்தல்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவை அவருக்கு மக்களாட்சி முறையில் ஆழ்ந்த பிடிப்பை உண்டாக்கியது. அவரது பேச்சாற்றல் திறனைக் கொண்டு காங்கிரசின் பிரதிநிதியாக மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் ரௌலத் சட்டத்திற்கெதிரான இணை நாடாளுமன்றக் குழுவில் வாதிட இங்கிலாந்து அனுப்பப்பட்டார். 1939ஆம் ஆண்டு சென்னை மேயராகப் பணியாற்றினார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற அந்தநேரத்தில் சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது.இதனைத் தீர்க்க பிரித்தானிய அரசுடன் போராடி பூண்டி நீர்தேக்கத்திற்கான வரைவு ஒப்புமை பெற்று தமது குறுகிய ஓராண்டு பணிக்காலத்திலேயே அதன் அடிக்கல்லை நாட்டினார்.ஆயினும் 1944ஆம் ஆண்டு இந்த நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது இவர் உயிருடன் இல்லை. இவரது முதன்மை சீடரான காமராஜர் பின்னர் இத்தேக்கத்திற்கு இவரது பெயரையே வைத்தார்.


சி. ராஜகோபாலாச்சாரி தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அன்றைய சேலம் மாவட்டத்தில் ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் 10 டிசம்பர் 1878 பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பங்கு வகித்தவர்.


தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917 இல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும் பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். 1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் போது வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்தி சிறை சென்றார். 1937-ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். பிரிட்டிஷ் ஜெர்மனியுடன் போர் தொடுத்த வேளையில் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்ட முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். போர்க்காலத்தில் பிரிட்டிஷாருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது. பின்னாளில் முகமது அலி ஜின்னாவுடனும் அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண விழைந்தார். இவரது திட்டம் சி ஆர் பார்முலா என அழைக்கப்பட்டது.




காமராஜர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவர். 1963-இல் காங்கிரஸ் முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸை தூய்மைபடுத்தவும் கட்சியை பலப்படுத்தவும் காமராஜர் திட்டம் 1963-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மூன்று முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியை விடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை 2,அக்டோபர் 1963 அன்று பதவி விலகல் செய்து பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எசு. கே. பாட்டீல், ஜெகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது.



வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்அவர் சட்டத் தேர்வை 1894-ஆம் ஆண்டு எழுதித் தேர்ச்சி பெற்றார். 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலைத் துவங்கினார். வ.உ.சி. விடுதலைக்குப் பின்னர் சென்னைக்குச் சென்றார். 1920-ஆம் ஆண்டு கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. வ.உ.சி.ஒரு பிரதிநிதியாக அதில் கலந்து கொண்டார்.


இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். 1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் குறிப்பிடத்தக்கதாக அமையவில்லை.


இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


சின்னம்


பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதை அடுத்து 1978ல் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுவரன் சிங் தலைமையிலான் பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். சுவரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது, இது காங்கிரசு (S)  என அழைக்கப்பட்டது. இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.



இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் (இந்திய விடுதலைக்கு முன்)

1.             உமேஷ் சந்தர் பானர்ஜி 1885 & 1892
2.             தாதாபாய் நௌரோஜி 1886, 1893 & 1906
3.             வில்லியம் வெட்டர்பர்ன் 1893–1900
4.             பத்ரூத்தின் தையூப்ஜி 1887
5.             ஜார்ஜ் யூல் 1887 - 1888
6.             பெரஸ்ஷா மேத்தா 1890
7.             ஆனந்தாச்சார்லு 1891 -
8.             ஆல்பிரட் வெப் 1894 -
9.             சுரேந்திரநாத் பானர்ஜி 1895
10.           ரகமத்துல்லா எம். சயானி 1896
11.           சி. சங்கரன் நாயர் 1897
12.           ஆனந்த மோகன் போஸ் 1898
13.           ரமேஷ் சந்தர் தத் 1899
14.           என். ஜி. சந்தவர்கர் 1900
15.           தின்ஷா எடுல்ஜி வாட்சா 1901
16.           சுரேந்திரநாத் பானர்ஜி 1902
17.           லால்மோகன் கோஷ் 1903
18.           ஹென்றி ஜான் ஸ்டெட்மென் காட்டன் 1904
19.           கோபால கிருஷ்ண கோகலே 1905
20.           தாதாபாய் நௌரோஜி 1906
21.           ராஷ்பிகாரி போஸ் (1907–1908)
22.           மதன் மோகன் மாளவியா 1909–1910
23.           வில்லியம் வெட்டர்பன்
24.           பிசன் நாராயணன் தர் 1911
25.           இரகுநாத் நரசிங்க முதோல்கர் 1912 - 1913
26.           நவாப் சையத் முகமது பகதூர் 1913 - 1914
27.           புபேந்திர நாத் போஸ் 1914 - 1915
28.           சத்தியேந்திர பிரசன்ன சின்கா 1915 - 1916
29.           அம்பிகா சரண் மசூம்தார் 1916 - 1917
30.           அன்னி பெசண்ட் 1917-1918
31.           மதன் மோகன் மாளவியா 1918-1919
32.           சையத் உசேன் இனாம் 1919 - 1920
33.           மோதிலால் நேரு 1920 - 1921
34.           லாலா லஜபதி ராய்
35.           சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் 1920
36.           ஹக்கீம் அஜ்மல் கான் 1921-
37.           சித்தரஞ்சன் தாஸ்
38.           முகமது அலி சௌகர்
39.           அபுல் கலாம் ஆசாத்
40.           மகாத்மா காந்தி
41.           சரோஜினி நாயுடு 1925
42.           எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் 1926
43.           முக்தர் அகமது அன்சாரி
44.           மோதிலால் நேரு
45.           ஜவகர்லால் நேரு
46.           வல்லபாய் படேல்
47.           மதன் மோகன் மாளவியா (1932–1933)
48.           நெல்லி சென்குப்தா 1933 - 1934
49.           இராசேந்திர பிரசாத் (1934–1935)
50.           ஜவகர்லால் நேரு (1936–1937)
51.           சுபாஷ் சந்திர போஸ் (1938–1939)
52.           அபுல் கலாம் ஆசாத் (1940–1946)

இந்திய விடுதலைக்குப் பின்
1.             ஆச்சார்ய கிருபளானி 1947 - 1948
2.             பட்டாபி சீதாராமய்யா (1948–1949)
3.             புருசோத்தம் தாஸ் டாண்டன்
4.             ஜவகர்லால் நேரு (1951–1954)
5.             யு. என். தேபர் (1955–1959)
6.             இந்திரா காந்தி 1959 - 1960
7.             நீலம் சஞ்சீவ ரெட்டி (1960–1963)
8.             கே. காமராஜ் (1964–1967)
9.             நிஜலிங்கப்பா (1968–1969)
10.           ஜெகசீவன்ராம் (1970–1971)
11.           சங்கர் தயாள் சர்மா (1972–1974)
12.           தேவ்காந்த் பரூவா (1975–1977)
13.           இந்திரா காந்தி (1978–1984)
14.           ராஜீவ் காந்தி (1985–1991)
15.           பி. வி. நரசிம்ம ராவ் (1992–1996)
16.           சீதாராம் கேசரி (1996–1998)
17.           சோனியா காந்தி (1998–

ஆயினும் மகாத்மா காந்தியடிகள் 1948 ஜனவரி, 29 அன்று காங்கிரஸை கலைத்துவிட்டு பொது மக்கள் சேவை மையமாக செய்ய வேண்டுமென கூறியதுடன் அதற்கான தீர்மானத்தை இயற்றியிருந்தார்.

ஆதார நூல்கள்:
1.                    1.Allan Octavian Hume by William Wedderburn 1913
2.             2.        Proceedings of First Indian National Congress-1885, 1905
3.        320 Million Judges by G.G. Mirchandani
4.        History of the Indian National Congress_B Pattabhi Sitaramayya 1935
5.        Indian national Congress_G.A.Natesan & Co 1910
6.        http://www.dailypioneer.com/nation/mahatma-wanted-to-bury-the-inc-once-and-for-all.html
7.        The Congress Party in India: Policies, Culture, Performance by N. S. Gehlot
8.        Beyond Doubt: A Dossier on Gandhi's Assassination by Teesta Setalvad






No comments:

Post a Comment